"ஒருநாள் பூகம்பம் வெடிக்கும்; ரங்கசாமி தான் பொறுப்பு" - பொடி வச்சு பேசும் நாராயணசாமி!
புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "புதுச்சேரியில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் காற்றில் பறக்கப்படவிடப்பட்டுள்ளன. ஏற்கனவே முதல் இரண்டு அலையில் பெரியளவில் மக்களை இழந்துள்ளோம். இந்த ஒமைக்ரான் தொற்றானது வேகமாக பரவக்கூடியது. தேவையில்லாமல் புத்தாண்டு கொண்டாட்டம் என்று சொல்லி புதுச்சேரிக்கு பல மாநிலங்களை சேர்ந்தவர்களை வரவழைத்து, கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.
இது உயர் நீதிமன்ற உத்தரவை மீறிய செயல். கொரோனா தொற்று இன்னும் அதிகமானால் அதற்கு முதல்வர் ரங்கசாமி தான் பொறுப்பு. புதுச்சேரியில் 2 பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும் அது பரவ வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சுகாதாரத்துறையோ, மாநில நிர்வாகமோ ஒமைக்ரான் வந்தால் மக்களை காப்பாற்றுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்கவில்லை. புதுச்சேரி அரசு மெத்தனமாக இருக்கிறது. மாநில அந்தஸ்து வேண்டும் என்று முதல்வர் ரங்கசாமி கேட்டுகிறார். இப்போது புதுச்சேரியில் இனக்கமான ஆட்சி இருக்கிறது.
முதல்வர் ரங்கசாமி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து மாநில அந்தஸ்து பெற ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாநில அந்தஸ்து இருந்தால்தான் எல்லா திட்டங்களையும் நிறைவேற்ற முடியும் என்று ரங்கசாமி கூறுகிறாரே ஏன்? ரங்கசாமி பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து மாநில அந்தஸ்து பெற அழுத்தம் கொடுக்கவில்லை. அவரின் கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை. கேட்கின்ற நிதியைக் கொடுக்கவில்லை. இவர்கள் அதிகார சண்டையில் போட்டி போட்டுக் கொண்டு எந்தவொரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.
இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரங்கசாமி தலைமையிலான அரசு ஒரு அலங்கோலமான அரசு என்பது தெளிவாக தெரிகிறது. இந்த புத்தாண்டிலாவது அவர்கள் திருந்த வேண்டும். சிறப்பு மாநில அந்தஸ்து பெறுவோம் என்று தேர்தல் வாக்குறுதியில் பாஜக குறிப்பிட்டிருந்தது. ஆனால், நாடாளுமன்றத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடையாது என்று உள்துறை அமைச்சரே கூறியுள்ளார். இதிலிருந்து என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. எல்லோரும் ஊழலில் திளைத்திருக்கிறார்கள். ஒருநாள் இது பூகம்பமாக வெடிக்கும்” என்றார்.