கொரோனா அறிகுறி உள்ளது… டெஸ்ட் செய்யவில்லை என்றால் தற்கொலை செய்வேன்! – முதலமைச்சருக்கு மிரட்டல்
கடலூரைச் சேர்ந்த ஒருவர் தனக்கு கொரோனா பரிசோதனை செய்யவில்லை என்றால் தற்கொலை செய்வேன் என்று முதலமைச்சருக்கு மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அறிகுறி இருந்தால் கூட அவர்களுக்கு பரிசோதனை செய்வது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. வருமானமின்றி தவிக்கும் தமிழக அரசு டாஸ்மாக் கடையைத் திறந்தால்தான் சம்பளமே கொடுக்க முடியும் என்ற நிலையில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி மீண்டும் கடுமையான ஊரடங்க வந்துவிட்டால் அரசாங்கமே திவாலாகிவிடும் என்ற அச்சம் உள்ளது. இதனால், தமிழகத்தில் பாதிப்பு இல்லை என்ற வகையில் அரசுத் துறைகள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டர் பக்கத்தில், “என் அப்பா கேரளாவுக்கு சென்று வந்தார். எனக்கு கொரோனா அறிகுறி உள்ளது. நெஞ்சுவலியால் ரொம்பவும் கஷ்டப்படுகிறேன். மருத்துவரிடம் சென்றால் திட்டி அனுப்பிடுறாங்க. வைரஸ் பரிசோதனை செய்துகொள்ள உதவவும். இல்லை என்றால் தற்கொலைதான் முடிவு!” என்று பதிவிட்டிருந்தார்.
உடனே பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “கவலை வேண்டாம் தம்பி. அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் சம்பந்தப்பட்ட நபருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
கவலை வேண்டாம் @ThantapaniBala தம்பி. @Vijayabaskarofl @DrBeelaIAS அவருக்கு உடனடியாக பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். https://t.co/A11ycTyiVk
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) May 22, 2020
இதற்கு பீலா ராஜேஷ் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், “அவரிடம் பேசிவிட்டேன். அவர் கடலூரில் இருக்கிறார். உடனடியாக பரிசோதனைக்கும், சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்கிறோம்” என்று கூறியுள்ளார்.
எல்லா சாமானியர்களாலும் ட்விட்டரில் முதல்வரைத் தொடர்புகொண்டு தங்கள் பிரச்னையை கூற முடியாது. குறைந்தபட்சம் அறிகுறிகள் உள்ளவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதன் மூலமே கொரோனா பரவலை நிறுத்த முடியும். இப்படி அலட்சியம் காட்டினால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கொரோனாவைத் தடுக்கவே முடியாது என்ற நெட்டிசன்கள் பலரும் கொந்தளித்து பதிவிட்டு வருகின்றனர்.
Spoken to him Sir He is in Cuddalore Will immediately arrange for testing and treatment Sir
— Dr Beela Rajesh IAS (@DrBeelaIAS) May 22, 2020