"ரூ.500 கோடி திமுக ஊழல்.. மக்களை டைவர்ட் பண்ண ரெய்டு" - எடப்பாடி ஆவேசம்!
மாதம் ஒரு மாஜி அமைச்சர் என்ற முறையில் தமிழ்நாடு அரசு லஞ்ச ஒழிப்பு துறை மூலம் ரெய்டுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ். பி. வேலுமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி, கே.சி.வீரமணி ஆகிய ஐந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளிலும் சொந்தமான இடங்களிலும் உறவினர்கள், நண்பர்கள் இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி சோதனைகளை அரங்கேற்றியது. அதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாகவும், அதுகுறித்த விசாரணை தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இச்சூழலில் முன்னாள் உயர் கல்வி துறை அமைச்சர் கே.பி.அன்பழகனின் வீடுகள், சொந்தமான இடங்கள் என 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. கே.பி. அன்பழகன் 2016-21ஆம் ஆண்டில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.11.32 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கே.பி.அன்பழகன், மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திர மோகன், மருமகள் வைஸ்னவி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய பரபரப்பான சூழலில் சொந்த ஊரான எடப்பாடியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரூபாய் 500 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதால் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியவில்லை. இவற்றை திசைதிருப்பவே லஞ்ச ஒழிப்புத் துறையினரை பயன்படுத்தி சோதனை நாடகங்களை திமுக அரங்கேற்றி வருகிறது. கே.பி.அன்பழகன் வீட்டில் நடைபெறும் சோதனை பழிவாங்கும் நடவடிக்கை.
ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த எட்டு மாதங்களில் திமுக எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தான் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்ற இந்த எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் 75 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் தொடங்கப்பட்டது. உயர்நீதிமன்ற உத்தரவுபடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எந்த முறைகேடும் இல்லாமல் நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாத காரணத்தால் மலையளவு அதிகரித்துள்ளது” என்றார்.