"போர்வைக்குள் நுழைந்த ஸ்டாலின்... அந்த ஆசை வந்துவிட்டதா?" - சந்தேகிக்கும் எடப்பாடி... அடுக்கடுக்காக புகார்!

 
எடப்பாடி ஸ்டாலின்

9 மாத  கால ஆட்சியில்  தனது  திறமையின்மை  மறைக்க  சமூக நீதிக்‌ கூட்டமைப்பு என்ற  பெயரில் மு.க.ஸ்டாலின் நாடகமாடுவதாக  எதிர்க்கட்சித்  தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் ஆசை  வந்துவிட்டதாகவும் அவர் விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகத்தில்‌ கடந்த 9 மாதங்களாக அலங்கோல ஆட்சி நடத்தி வரும்‌ திமுக தலைவரும்‌, முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ தன்னுடைய ஆட்சி ரீதியான தொடர்‌ தோல்விகளை மறைக்க, சமூக நீதி கூட்டமைப்பு என்ற போர்வைக்குள்‌ நுழைந்திருக்கிறார்‌. அகில இந்திய அளவிலும்‌, குறிப்பாக நம்‌ தாய்த்‌ திருநாடான தமிழகத்திலும்‌ சமூக நீதிக்கு இப்போது என்ன பாதிப்பு வந்துள்ளது என்று யாருக்கும்‌ புரியவில்லை.

இ.பி.எஸ் அந்தர்பல்டி வெளியிட்ட தி.மு.க… கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி!

தமிழ்‌ நாட்டைப்‌ பொறுத்தவரை, சமூக நீதிக்கு ஏதாவது பங்கம்‌ ஏற்பட்டது என்றால்‌ அதற்கு மூலக்‌ காரணம்‌ திமுக-வாகத்‌ தான்‌ இருக்கும்‌  என்பதைத்  தமிழக மக்கள்‌ நன்கு அறிவார்கள்‌.  1996 முதல்‌ 2018 வரை, மத்திய அரசில்‌ சுமார்‌ 17 ஆண்டுகள்‌ திரு. தேவகவுடா, திரு. வாஜ்பாய்‌, திரு. மன்மோகன்சிங்‌ ஆகியோருடன்‌ ஆட்சி அதிகாரத்தை அனுபவித்து, தங்களது சொந்தங்களுக்கெல்லாம்‌ முக்கியமான மந்திரி பதவிகளை வாங்கி, ஊழலில்‌ திளைத்த திமுக மற்றும்‌ அப்போது அக்கட்சியின்‌ செயல்‌ தலைவராக  இருந்த திரு. ஸ்டாலின்‌ அவர்கள்‌ சமூக நீதிக்காக என்ன செய்தார்கள்‌ என்பதை விளக்க வேண்டும்‌.

  • திமுக - காவேரிப்‌ பிரச்சனை, முல்லைப்‌ பெரியாறு பிரச்சனை,  நீட்‌ நுழைவுத்‌ தேர்வு பிரச்சனை, ஜல்லிக்கட்டு இட ஒதுக்கீடுப்‌ பிரச்சனை, பிற்பட்டோர்‌ மற்றும்‌ மிகவும்‌ பிற்பட்டோர்‌ நலன்‌ என்று, எதிலும்‌ எதையும்‌ செய்யாமல்‌ மத்திய அரசில்‌ அங்கம்‌ வகித்தது.  
  • தமிழகத்திற்கு சொந்தமான கச்சத்‌ தீவை இலங்கைக்கு தாரை வார்க்க காங்கிரசுக்கு உறுதுணையாக இருந்தது. போன்ற பல்வேறு துரோகங்களை இழைத்த திமுக இன்று, சமூக நீதி என்ற போர்வையில்‌ கபட நாடகம்‌ ஆடுகிறது.

சமுக நீதிக்காக ஒரு துரும்பையும்‌ கிள்ளிப்‌ போடாத இன்றைய திமுக தலைவர்‌ திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ இந்தியா முழுமைக்குமான சமூக நீதிக்‌ கூட்டமைப்பு என்ற ஒன்றை ஆரம்பித்து, 37 தலைவர்களுக்கு கடிதம்‌ அனுப்பியதன்‌ உள்நோக்கம்‌ என்ன ?  இந்தியாவில்‌ அடுத்த பொதுத்‌ தேர்தல்‌ 2024ல்‌ தான்‌ நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாகவே பல மாநிலக்‌ கட்சிகளின்‌ தலைவர்களுக்கு, தாங்கள்‌ பிரதமராக வேண்டும்‌ என்ற எண்ணம்‌ வந்துள்ளது. எனவே, திரு. ஸ்டாலின்‌ அவர்களும்‌ அதே எண்ணத்தில்‌ சமூக நீதிக்‌ கூட்டமைப்பு என்ற போர்வையில்‌ கடிதம்‌ எழுதி இருக்கிறாரோ என்று எண்ணத்‌ தோன்றுகிறது.

ஸ்டாலின் கடிதம்

இந்தக்‌ கூட்டமைப்பு குறித்து அவர்‌ வெளியிட்டுள்ள அறிக்கையிலோ, விளம்பரங்களிலோ, கடிதத்திலோ எந்தெந்த விதத்தில்‌ சமூக நீதி பறிக்கப்பட்டது; எந்தெந்த விதத்தில்‌ தமிழக மக்களுக்கு சமூக நீதி கிடைக்கவில்லை என்றெல்லாம்‌  விளக்காமல்‌, தற்போதைய மத்திய அரசின்‌ கல்வி மற்றும்‌ வேலை வாய்ப்புகளிலும்‌ கிடைத்துள்ள 27 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு தான்தான்‌ காரணம்‌ என்று மார்‌ தட்டுகிறார்‌.

இதற்காக உயர்நீதிமன்றத்தில்‌ 50 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு வழக்கு தொடர்ந்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌ மட்டுமே. நமக்கு இந்தப்‌ பிரச்சனையில்‌ நல்ல பெயர்‌ வந்துவிடுமே என்ற எண்ணத்தில்‌ பின்யோசனையுடன்‌ திமுக-வும்‌, மற்றவர்களும்‌ இந்த வழக்கில்‌ தங்களை இணைத்துக்‌ கொண்டனர்‌.  நாட்டு மக்களுக்கு நன்மை வரக்கூடிய ஒரு சட்டத்தை இயற்றியவர்களுக்கு. நன்றி சொல்லக்கூட மனம்‌ வராத திரு. ஸ்டாலின்‌ அவர்கள்‌ ஏதோ தன்னால்தான்‌ 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது என்று தம்பட்டம்‌ அடித்துக்கொள்வது கண்டிக்கத்தக்கது.

ஸ்டாலின்

தமிழகத்தின்‌ அனைத்து சீர்கேடுகளுக்கும்‌ காரணமான திமுக-வும்‌,  அதன்‌ தலைமையும்‌ சமூக நீதிக்‌ கூட்டமைப்பு என்ற ஒன்றை ஏற்படுத்துவதும்‌, அதில்‌ சேர இந்தியாவில்‌ உள்ள 37 கட்சித்‌ தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி  இருப்பதும்‌ உள்நோக்கம்‌ கொண்டதாகவே நாங்கள்‌ கருதுகிறோம்‌. ஏற்கெனவே, நீட்‌ தேர்வு விலக்கு தொடர்பாக ஆதரவு அளிக்குமாறு 7 மாநில முதல்வர்களுக்கு திரு. மு.க. ஸ்டாலின்‌ அவர்கள்‌ கடிதம்‌ எழுதினார்‌.  அந்தக்‌ கடிதத்திற்கு இதுவரை எந்த ஒரு மாநில முதல்வராவது பதில்‌ கடிதம்‌ எழுதி இருக்கிறார்களா ? அப்படி எழுதி இருந்தால்‌ அந்தக்‌ கடிதத்தை திரு. ஸ்டாலின்‌ அவர்கள்‌ வெளியிடத்‌ தயாரா ?

எடப்பாடி

ஆள்‌ இல்லாத கடையில்‌ டீ ஆற்றுவது போல,  திரு. ஸ்டாலின்‌ அவர்கள்‌ 37 கட்சித்‌ தலைவர்களுக்கு கடிதம்‌ எழுதியுள்ளார்‌. தன்னுடைய 9 மாத கால ஆட்சியின்‌ ஊழல்கள்‌, முறைகேடுகள்‌, கரப்ஷன்‌, கமிஷன்‌, கலெக்ஷன்‌, அராஜகம்‌, அத்து மீறல்‌, காவல்‌ துறையினர்‌ உட்பட அனைத்துத்‌. துறையினருக்கும்‌ பாதுகாப்பின்மை, கொலை கொள்ளை, பாலியல்‌ துன்புறுத்தல்கள்‌ போன்ற சட்டவிரோத, சமூக விரோதச்‌ செயல்கள்‌ போன்றவற்றைக்‌ கட்டுப்படுத்த முடியாத நிலையில்‌, மக்களிடத்தில்‌ கடந்த 9 மாத கால திமுக அரசின்‌ தோல்வியை மறைக்க, சமூக நீதிக்‌ கூட்டமைப்பு என்ற பெயரில்‌ காகிதப்‌ பூ நாடகம்‌ ஆடுவதை  நிறுத்திவிட்டு, தமிழகத்தின்‌ முன்னேற்றத்திற்காகவும்‌, தமிழக மக்களின்‌ நலனுக்காகவும்‌, முடிந்தால்‌ எதையாவது செய்யும்படி திரு. ஸ்டாலின்‌ அவர்களை வற்புறுத்துகிறேன்.. ” என்று குறிப்பிட்டுள்ளார்.