“திருச்சியிலே திருப்புமுனை; தேர்தலிலே வெற்றிச் சிகரம்” : ஸ்டாலின் பூரிப்பு!

 

“திருச்சியிலே திருப்புமுனை; தேர்தலிலே வெற்றிச் சிகரம்” : ஸ்டாலின் பூரிப்பு!

அதிமுக பச்சைப் பொய் சொல்வதுடன், எவ்வளவு பலவீனமான நிர்வாகத்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ சிறப்புப் பொதுக்கூட்டத்திற்காகத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் உடன்பிறப்புகள் பேரார்வத்துடன் தீரர் கோட்டமாம் திருச்சி நோக்கி வந்தபோது, வழியெங்கும் காற்றில் அசைந்தாடிய கருப்பு சிவப்புக் கொடிகளின் அழகையும் கம்பீரத்தையும் பார்த்து உள்ளத்தில் இலட்சிய இளஞ்சூடு பரவிடப் பெற்றனர். பதாகைகள், அவற்றில் பொறிக்கப் பட்டிருந்த வாசகங்கள் – ஓவியங்கள் என எல்லா வகையிலும் தி.மு.கழகத்தின் கொள்கைகளை முன்னிறுத்தும் பணியை எள்ளளவும் குறைவின்றிச் செவ்வனே செய்திருந்தார் கே.என்.நேரு.

“திருச்சியிலே திருப்புமுனை; தேர்தலிலே வெற்றிச் சிகரம்” : ஸ்டாலின் பூரிப்பு!

கட்சி எல்லைகளைக் கடந்த பல்துறை வல்லுநர்கள் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டத்தில் உரையாற்றினர். மிகக் குறுகிய இடைவெளியில் அவர்களுக்கு அழைப்பு விடுத்த நிலையிலும், நாட்டு மக்களிடம் உண்மை நிலவரத்தை எடுத்துச் சொல்ல வேண்டிய கடப்பாட்டுடன் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன், விவசாயிகளின் நலன் காக்கப் பாடுபடும் பாலகிருஷ்ண தீட்சிதர், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, சூழலியலாளர் பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், டாக்டர் ரவீந்திரநாத், டாக்டர் எழிலன், எழுத்தாளர் வே.மதிமாறன் ஆகியோர் வெகு சிறப்பாக உரையாற்றியதை நேரலையில் பார்த்தவாறுதான் நிகழ்ச்சிக்கு வந்தேன். கழக மேடையில் கருத்துரையாற்றிய அவர்கள் அனைவருக்கும் நேற்று (மார்ச் 8) என் நன்றியினை அலைபேசி வாயிலாகத் தெரிவித்தேன். வல்லுநர்கள் எந்தெந்தத் துறைகள் சார்ந்து கருத்துகளை வழங்கினார்களோ அந்தத் துறைகளின் சார்பில்தான், பத்தாண்டுகால அதிமுக ஆட்சியின் சீரழிவிலிருந்து தமிழகத்தை மீட்கும் வகையில் அடுத்த பத்தாண்டுகளுக்கான தொலைநோக்குத் திட்டங்களை வெளியிட்டேன்.

  1. வளரும் வாய்ப்புகள் வளமான தமிழ்நாடு (தொழில்வளர்ச்சி-வேலைவாய்ப்பு), 2. மகசூல் பெருக்கம் – மகிழும் விவசாயி (வேளாண் வளர்ச்சி), 3. குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர் (நீர்மேலாண்மை), 4. அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம் (கல்வி – சுகாதாரம்) 5. எழில்மிகு மாநகரங்களின் மாநிலம் (நகர்ப்புற கட்டமைப்பு), 6. உயர்தர ஊரக கட்டமைப்பு – உயர்ந்த வாழ்க்கை தரம் (ஊரக உட்கட்டமைப்பு), 7. அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் (சமூகநீதி – சமத்துவ நிலை) இவையடங்கிய 7 உறுதிமொழிகளை ‘மு.க.ஸ்டாலின் ஆகிய நான்’ வழங்கினேன். ‘மு.க.ஸ்டாலின் ஆகிய நான்’ என்பவன் உயிர்நிகர்த் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களில் ஒருவன். அதனால்தான், உங்களின் ஒத்துழைப்போடுதான் இந்தத் தொலைநோக்குத் திட்டத்தை கழக ஆட்சியில் – அடுத்த பத்தாண்டுகளில் நிறைவேற்றிட முடியும் என்பதை வலியுறுத்தி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை திரண்டிருந்த உங்களையும் உறுதிமொழி ஏற்கச் செய்தேன். கட்டுப்பாடு மிக்க பட்டாளம் போல அத்தனை பேரும் எழுந்து நின்று ஒரே குரலில் உறுதிமொழியை ஏற்றபோது, கழகத்தின் வெற்றிக்குக் கட்டியம் கூறுவது போல அமைந்தது. தி.மு.கழகத்தால் இதனைச் செய்து முடிக்க முடியும். தி.மு.கழகத்தால் மட்டுமே செய்து முடிக்க முடியும் என்பதால் நமக்கான பொறுப்பு மிகுந்திருக்கிறது. தோழமைச் சக்திகளுடன் இணைந்து நின்று களப்பணியாற்றி, வெற்றியினை உறுதி செய்திட பெரும் உழைப்பு தேவைப்படுகிறது. கழகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதனைக் கண்டு ஆட்சியாளர்கள் மிரள்வதும் தெரிகிறது.
“திருச்சியிலே திருப்புமுனை; தேர்தலிலே வெற்றிச் சிகரம்” : ஸ்டாலின் பூரிப்பு!

மார்ச் 8 – மகளிர் தினத்திற்கு முதல் நாள் நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில், குடும்பத்தலைவியருக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் ‘உரிமைத் தொகை’ என அறிவித்தேன். திருச்சியில் வெளியிட்ட அறிவிப்பு, தமிழகத்தின் திக்குகள் எங்கும் உடனடியாகப் போய்ச் சேர்ந்து பெண்களிடம் மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் வரவேற்புப் பேராதரவைப் பெற்றது. உளவுத்துறை மூலம் இதனைத் தெரிந்துகொண்ட அடிமை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள், மாதந்தோறும் 1500 ரூபாய் என்று அறிவிக்கிறார்கள். அதுவும், தி.மு.க. முன்கூட்டியே தெரிந்துகொண்டு அறிவித்துள்ளது என்று கூறுகிறார்கள் என்றால் அவர்கள் எந்தளவு பச்சைப் பொய் சொல்கிறார்கள் என்பதையும், எவ்வளவு பலவீனமான நிர்வாகத்திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் தமிழக மக்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியும். இந்த அடிமைக் கூட்டத்தாரிடமும், அவர்களை ஆட்டிப்படைக்கும் கட்சியினரிடமும் தமிழகம் இனியும் ஏமாறத் தயாராக இல்லை. வெற்று விளம்பரங்கள் – அவசர கதி அறிவிப்புகளால் மக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. மாறாக, விலைவாசி உயர்வு – பெட்ரோல் விலை உயர்வு – சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு – அத்தியாவசியப் பொருள்கள் விலை ஏற்றம் என பெண்களையும் பொதுமக்களையும் நாள்தோறும் நசுக்கி வதைப்பதே மத்திய – மாநில ஆட்சியாளர்களின் கொள்கைத் திட்டமாக இருக்கிறது. இந்நிலையை மாற்றுவோம்; இழிநிலையைத் துடைத்தெறிவோம். தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ பொதுக்கூட்டம் மாநாடுகளைவிட மிகச் சிறப்பான வகையிலே நடந்தேறச் செய்த இலட்சோப லட்சம் உடன்பிறப்புகள் அனைவர்க்கும் நன்றி மலர்களைக் காணிக்கையாக்கிக் களிப்பு மிகக் கொள்கிறேன். அதனை வாடாத வெற்றிமாலையாகத் தொடுத்திடுங்கள்.

“திருச்சியிலே திருப்புமுனை; தேர்தலிலே வெற்றிச் சிகரம்” : ஸ்டாலின் பூரிப்பு!

களத்தின் கதாநாயகனான தேர்தல் அறிக்கை மார்ச் 11-இல் வெளியாகிறது. அதன்பின் தேர்தல் பரப்புரைப் பயணங்கள் நடைபெறவிருக்கின்றன. உங்கள் எழுச்சி முகம் கண்டு இன்பம் கொள்ள நேரில் வருவேன்; மக்களின் பேராதரவைத் திரட்டிட வருவேன். உங்களில் ஒருவனான நான் உங்களை நம்பியே வருகிறேன்.உழைப்போம்… ஓயாது உழைப்போம்… இலக்கை நோக்கி ஒன்றுபட்டு உழைப்போம்! திருச்சி சிறுகனூரில் திருப்புமுனை கண்டோம்; தேர்தல் களத்தில் வெற்றிச் சிகரத்தைக் காண்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.