"மோடி படம் எங்கே?"... அரசு பேனரை கழட்டிய பாஜகவினர் - புகார் கொடுத்த முன்னாள் எம்எல்ஏ!

 
பாஜக பேனர் விவகாரம்

கொரோனாவிலிருந்து மக்களின் உயிரைக் காக்க தடுப்பூசி போடப்பட்டாலும், அந்த தடுப்பூசியில் யார் படம் போட வேண்டும் என்பதிலேயே குறியாக உள்ளனர் சில பாஜகவினர். ஜார்கண்ட், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படம் நீக்கப்பட்டு, அந்தந்த முதலமைச்சர்களின் படம் பொறிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது பாஜக. இருப்பினும் தமிழ்நாட்டில் அந்த மாதிரியான செயலை மாநில அரசு செய்யவில்லை. இன்றளவும் தடுப்பூசி சான்றிதழில் மோடியின் படமே இருக்கிறது.பாஜக பேனர் விவகாரம்

இப்படி இருந்தாலும் ஒருசில பாஜகவினர் மெகா தடுப்பூசி முகாமில் வைக்கப்படும் பேனரிலும் பிரதமர் மோடி படத்தை பொறிக்க வலியுறுத்துகின்றனர். சிலர் அடிதடிகளிலும் இறங்குகிறார்கள். அரசு அதிகாரிகளிடம் தேவையில்லாமல் வம்பிழுத்து முகாம்களுக்கு இடையூறு செய்கின்றனர். இதன் உச்சக்கட்டமாக சிவகங்கை மாவட்டத்தில் மோடி படம் போடாத பேனரையே அவிழ்த்துவிட்டனர் பாஜகவினர். சாலைக்கிராமத்தில் நேற்று நடைபெற்ற முகாமிற்கான பேனரில் மோடி படம் இடம்பெறவில்லை.


எப்போதும் போல முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்நாள் முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் படம் பொறிக்கப்பட்ட பேனர் கட்டப்பட்டிருந்தது.அப்போது அங்கு வந்த பாஜகவினர், அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பேனரை அகற்றினர். மோடி படம் இடம்பெற வேண்டும் எனவும் எச்சரித்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக, திமுகவினர் கொந்தளித்தனர். திமுக எம்பி செந்தில்குமாரோ இதனை பகிர்ந்து இதையும் கடந்து செல்லவா என தலைமையிடம் கேள்வியெழுப்பினார்.

 மாஜி எம்.எல்.ஏ. புகார்

இச்சூழலில் முன்னாள் எம்எல்ஏ  சுப. மதியரசன் போலீஸில் கொடுத்துள்ள புகாரில், "நேற்று சாலைக்கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமிற்கு பாஜகவைச் சேர்ந்த கோவிந்தன், செல்லக்குடி உள்ளிட்டோர் வந்தனர். மேலும், அங்கு கட்டப்பட்டிருந்த பேனரில் பிரதமர் மோடியின் படம் எங்கே என கேள்வி எழுப்பினர். அத்துடன் தடுப்பூசி போட வந்தவர்களையும் தடுத்து நிறுத்தி அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அரசு பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.