“தவறு நடக்கிறது.. எனது இரத்தம் கொதிக்கிறது” – எம்.பி.ஜோதிமணி ஆவேசம்!

 

“தவறு நடக்கிறது.. எனது இரத்தம் கொதிக்கிறது” – எம்.பி.ஜோதிமணி ஆவேசம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும் காங்கிரஸுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பெரும் இழுபறிக்கு பிறகு தான் இந்த 25 சீட் கூட திமுக கொடுத்தது. காங்கிரஸ் தற்போது 25 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் வேட்பாளர் தேர்வில் தவறு நடப்பதாக கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போது கொந்தளித்துக் கொண்டிருக்கின்ற உணர்வுகளை நான் அறிவேன். தொகுதி,வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை.நிறைய தவறு நடக்கிறது. தட்டிக்கேட்டேன். பதிலில்லை. தொண்டர்களின் இரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்கள் நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.

“தவறு நடக்கிறது.. எனது இரத்தம் கொதிக்கிறது” – எம்.பி.ஜோதிமணி ஆவேசம்!

நீண்டகாலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெறமுடியும் என்பது அக்கிரமம்.காங்கிரஸ் கட்சி தொண்டர்களில் இரத்தத்திலும்,வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமையில்லை.

எனது தலைவர் @RahulGandhi பணம் தான் பிரதானமென நினைத்திருந்தால் இன்று நான் எம் பி கிடையாது. இந்த தலைவர்கள் தொண்டர்களுக்கு மட்டுமல்ல தன்னை நம்பிய தலைவருக்கும் துரோகம் செய்கிறார்கள். நமது கட்சியையும்,நமது தலைவரின் கௌரவத்தையும் தொண்டர்களாகிய நாம் தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.

உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது. எனது யுத்தத்தை நான் தொடர்வேன். தொண்டர்களின் குரலாக தொடர்ந்து ஒலிப்பேன்.நடப்பது நடக்கட்டும். எதிரிகளை மட்டுமல்ல துரோகிகளையும் எதிர்கொள்ளும் வலிமை நமக்கு உண்டு” என பதிவிட்டுள்ளார்.