முதல்வர் வேட்பாளர் விவகாரம் – சமரசத்திற்கு தயரான ஓ.பி.எஸ்?
அ.தி.மு.க.வில் “முதல்வர் வேட்பாளர் யார்?” என்ற பரபரப்பான இழுபறி இன்று 6-ம் தேதி இரவோடு முடிவுக்கு வந்து விடும் எனத் தெரிகிறது.
முதல்வர் வேட்பாளர் விவகாரம் தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ், துணை முதல்வர் ஓ.பிஎஸ் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், சொந்த ஊரான பெரிய குளத்தில் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். பல அமைச்சர்களோடும் அவர் பேசினார்.
இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் வீண் சச்சரவுகள் வேண்டாம். தன்னால் கட்சி இரண்டாக உடைந்தது என்ற அவமானப் பெயர் வேண்டாம். எனவே முதல்வர் வேட்பாளராக கட்சி மேலிடம் எடுக்கும் முடிவை தான் ஏற்க தயாராக இருப்பதாக ஓ.பி.எஸ். முடிவெடுத்துள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழக மக்கள் மற்றும் அஇஅதிமுக கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும்.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது!
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!!
எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!
— O Panneerselvam (@OfficeOfOPS) October 5, 2020
இதன் நிமித்தமாகவே ட்விட்டரில் தமிழக மக்கள் மற்றும் கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!” என ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு வாரமாக நடந்த ரகசிய ஆலோசனைகள் எதுவும் கைகூடாத நிலையில், இருப்பதையும் இழந்துவிடக்கூடாது என்கிற முடிவுக்கு ஓ.பி.எஸ் வந்துவிட்டதை, டிவிட்டர் பதிவில் பார்க்கமுடிகிறது என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். 7 ஆம் தேதி என்ன நடக்கும் என இப்போதே தெரிந்துவிட்டதால் மற்றொரு தரப்பு உற்சாகம் அடைந்துவிட்டதாம்.
-இர.போஸ்