4 மாநிலங்களில் வெற்றிமுகம்.. தமிழத்திலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் - அண்ணாமலை கருத்து..

 
அண்ணாமலை


சட்டமன்ற தேர்தலில் மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களைப்  போன்று தமிழகத்திலும் பாஜக ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர்  அண்ணாமலை தெரிவித்தார்
 
பஞ்சாப்,  உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தராகண்ட் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  இதில்  4 மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை வித்தியாசங்களுடன்  முன்னிலை  வகிக்கிறது. காங்கிரஸ் கைவசம் இருந்த பஞ்சாப்பில் ஆம் ஆத்மி வெற்றி வாகையை சூடவுள்ளது. காங்கிரஸ் அனைத்து இடங்களிலும் படுதோல்வியை சந்தித்திருக்கிறது. இதனால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 2 ஆக குறைந்திருக்கிறது.

பாஜக வெற்றி

4 மாநிலங்களில் பாஜக முன்னிலையில் உள்ளதையடுத்து, அக்கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில்  தமிழ்நாடு பாஜக மாநில   தலைவர் அண்ணாமலை சென்னை  கமலாலயத்தில்  இனிப்பு வழங்கி கொண்டாடினர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,   பாஜக ஆட்சியில் வாழ்வாதாரம் உயர்ந்ததால், உ.பி., மக்கள் பாஜகவின் நிரந்தர வாக்காளர்களாக மாறி உள்ளதாக கூறினர்.  மேலும் மறுபடியும் ஒருமுறை இந்தியா, ஒருமித்த குரலில் நாம் மோடியுடன் பயணிப்போம் என்ற வார்த்தையை உறுதியுடன் பதிவு செய்துள்ளதாகவும்,   இதுவரை மதத்தை வைத்து இருந்து வந்த வாக்குவங்கி  அரசியல் தற்போது  உடைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

அண்ணாமலை

மோடி தலைமையிலான அரசு வட மாநிலங்களில் கொரோனாவை கையாண்ட விதத்திற்குத்தான், மக்கள் இந்த வெற்றியை அளித்துள்ளதாக கூறிய அவர்,  உ.பி.யில் 33 ஆண்டுகளுக்கு பின் ஆளுங்கட்சி ஆட்சியை பிடிக்கிறது என்று குறிப்பிட்டார். 2024ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தாலும் எதிர்கொள்ள தயார் என  தெரிவித்த அண்ணாமலை ,  ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு தயாராகி விட்டதாக தேர்தல் ஆணையர் கூறி உள்ளதால் 2024 அல்லது 2026-ல் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறலாம் என்றும் அதில்  மணிப்பூர், கோவாவை போன்று தமிழகத்திலும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்தார்.