மாநில மக்கள் அறிவாளிகள்... பா.ஜ.க.வின் உண்மையான முகத்தை அவர்கள் உணர்ந்துள்ளனர்.. அசோக் கெலாட்

 
அசோக் கெலாட்

மாநில மக்கள் அறிவாளிகள். பா.ஜ.க.வின்  உண்மையான முகத்தை அவர்கள் உணர்ந்துள்ளனர் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், 2018ல் எங்கள் ஆட்சி (ராஜஸ்தான்) அமைந்த பிறகு, 8 மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் 6ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதுவே எங்களது நல்லாட்சியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையாகும். உலகின் மிகப்பெரிய கட்சி என்று கூறிக்கொள்ளும் பா.ஜ.க. இந்த தேர்தல்களில் டெபாசிட்டை கூட இழந்தது, மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடித்தது. 

காங்கிரஸ்

தோல்வியால் பயந்து ஆத்திரமடைந்த பா.ஜ.க. மாநில தலைவர், மத்திய அமைச்சர்கள் மற்றும் பிற தலைவர்கள் வளங்களை தவறாக பயன்படுத்தி தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். மாநில மக்கள் அறிவாளிகள். பா.ஜ.க.வின்  உண்மையான முகத்தை அவர்கள் உணர்ந்துள்ளனர். கடந்த காலங்களில் உள்துறை அமைச்சருக்கு ராஜஸ்தான் மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். அவர்கள் (பா.ஜ.க.) எவ்வளவு பிரச்சாரம் செய்தாலும், இந்த முறையும் அவர்கள் வலையில் விழ மாட்டார்கள் என்று பதிவு செய்துள்ளார்.

பா.ஜ.க.

காங்கிரஸ் தற்போது 6 மாநிலங்களில் ஆட்சியில் உள்ளது. இதில், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் முதல்வராக உள்ளனர். ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் ஆளும் அரசாங்கங்களின் கூட்டணியில் உள்ளது.