இனி பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும்.. - முதல்வரின் அறிவிப்புக்கு அன்புமணி வரவேற்பு..

 
அன்புமணி ராமதாஸ் - ஸ்டாலின்

தமிழக பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசே இனி நியமனம் செய்யும் என்ற முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின்  அறிவிப்பு வரவேற்கத்தக்கது எப பா.ம.க., எம்.பி., அன்புமணி ராமதாஸ்  தெரிவித்துள்ளார்.

இன்றைய  சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் கீழ் உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.  உறுப்பினர்களின் கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.  அந்தவகையில் பாமக  எம்.எல்.ஏ. ஜி.கே.மணி  துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக சட்டசபையில் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின், பல்கலைக்கழக துணை வேந்தர்களை இனி மாநில அரசே நியமனம் செய்யும் என்றும்,  இது தொடர்பாக மார்ச் மாதம் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ்

முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.  அந்தவகையில் பாமக மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் , “ தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். முதலமைச்சரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது..

துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்க சட்டம் இயற்றக் கோரி கடந்த திசம்பர் 29-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பா.ம.க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகியிருப்பதில் மகிழ்ச்சி. பல்கலைக்கழகங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் தான் தமிழ்நாட்டின் கல்வி நலனையும், கலாச்சார நலனையும் காக்க முடியும். அந்த வகையில் இந்த சட்டத் திருத்தம் மிகவும் அவசியமாதாகும். அதனால்  துணைவேந்தர்கள் நியமனச் சட்டத்தை பா.ம.க. ஆதரிக்கும்.. ”என்று பதிவிட்டுள்ளார்.