#BREAKING பரபரப்பாகும் அரசியல் களம்... தவெகவை காலி செய்ய திமுக- அதிமுக ஸ்கெட்ச்
நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தல் வெற்றித் தோல்விகள், அதிர்ச்சிகள், ஆச்சரியங்கள் மட்டுமின்றி, வரலாற்று சிறப்புமிக்க தருணமாகவே அமைந்தது.

கட்சி தொடங்கிய 2 ஆண்டுகளில் மக்களின் ஆதரவை பெற்று அதிக இடங்களில் வெற்றி பெற்ற விஜய்... அப்படியே வெற்றி பெற்றாலும் ஆட்சி அமைக்க முடியாத சூழல்! மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பரிசு, கோடைக்கால நிவாரணம் என தொடர்ந்து பல பண சர்ப்ரைஸ்களை மக்களுக்கு கொடுத்து கண்டிப்பாக திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் என நம்பிக்கையுடன் நடைபோட்ட ஸ்டாலினுக்கு, தனது சொந்த தொகுதியிலேயே தோல்வி அடைந்தது பேரதிர்ச்சியாகவே இருந்தது. வரலாற்றில் திமுக தலைவரும், கட்சியின் பொதுச்செயலாளரும் தோற்ற வரலாறு உருவானதுடன், திமுக சட்டமன்ற குழு தலைவராகவும், எதிர்க்கட்சி தலைவராகவும் கூட அமர முடியாத சூழல் ஸ்டாலினுக்கு ஏற்பட்டது. அதிமுகவை தன் வசம் வைத்துகொண்டு கெத்துகாட்டிவரும் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றாலும், ஆட்சி அரியணையிலோ, எதிர்க்கட்சி தலைவர் இருக்கையிலோ அமரமுடியாத சோக சம்பவம்... இப்படி பல ஆச்சர்யங்களையும், அதிர்ச்சிகளையும் இந்த தேர்தல் கொடுத்தது.
நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று இருந்தாலும், பெரும்பான்மை இல்லாததால் தவெகவால் ஆட்சியமைக்க முடியவில்லை. இந்த சூழலில் காங்கிரஸ் தங்களது ஆதரவை விஜய்க்கு தெரிவித்துள்ளது. இருப்பினும் பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏக்கள் இல்லாது 112 எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருப்பதால் தவெகவின் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. ஒருபுறம் நேரு ஸ்டேடியத்தில் பதவியேற்புக்கான விழா ஏற்பாடுகளை தவெக தலைமை செய்துவந்தாலும், ஆதரவு எம்எல்ஏக்களின் முழுப்பட்டியலை தந்தால்தான் ஆட்சியமைக்க அழைப்புவிடுப்பேன் என்று தமிழக பொறுப்பு ஆளுநர் முரண்டு பிடிக்கிறார்.

இத்தகைய சூழலில் அதிமுக - திமுக ஒன்று சேர்ந்து ஆட்சியமைக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவதே பாஜக என்றும் கூறப்படுகிறது. திராவிட கட்சிகளின் இந்த புதிய திட்டத்தின் கிளைமேக்ஸ்காகவே ஆளுநர் பதவியேற்கு விழாவை தாமதபடுத்துவதாக தெரிகிறது. பெருமளவில் மக்கள் வாக்களித்து விஜய்யை வெற்றிபெற செய்துள்ளனர். ஆனால் அதை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, தன்னுடைய பங்காளியுடனான வெறுப்பையும் மறந்து பாஜகவுடன் இணைந்து வெளியில் இருந்து நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க சம்மதிப்பதாக கூறப்படுகிறது. "சாட்சிக்காரன் காலில் விழுவதை விட, சண்டைக்காரன் காலில் விழலாம்" என்ற பழமொழி போன்று திராவிட கட்சிகளின் இந்த முடிவு அரசியலில் மற்றொரு ஆச்சர்யத்தை நிகழ்த்துமா? அரசியல் எதிரிகளாக இருக்கும் திமுக - அதிமுக ஆட்சிக்காக கூட்டணி சேருமா? என்பது பெரும் எதிர்பார்ப்பாகவே உள்ளது.

