தளபதியை பார்க்கும் போதெல்லாம் மோடி சொல்வார்... மனம் திறந்த துரைமுருகன்
![d](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/4675af33012b5bf0ca1301ee2408de28.jpg)
நமக்கும் பாஜகவுக்கும் ஆயிரம் கருத்து வேற்றுமைகள் உண்டு. ஆனால், தளபதியை பார்க்கும் போதெல்லாம் பிரதமர் மோடி சொல்வார்... என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்.
விருதுநகர் அடுத்த பட்டம்புதூரில் திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்று பேசினார்.
அவர் பேசிய போது, ஆட்சியையும் கட்சியையும் முதல்வர் ஸ்டாலின் திறம்பட செயல்படுத்தி வருகின்றார். அதனால் தான் அவர் நடத்தும் ஆட்சியைக் கண்டு அகில இந்தியாவும் புகழ்கிறது என்றார் .
தளபதி கட்சித் தலைவராகி முதலமைச்சரான உடன் இன்றைக்கு இருக்கும் முதலமைச்சர்களிலேயே முதல் முதலமைச்சராக இருக்கக்கூடியவர் தளபதி. இதை இந்தியாவை ஒப்புக் கொண்டிருக்கிறது என்று பாராட்டினார்.
அவர் மேலும் பேசிய போது, நமக்கும் பாஜகவுக்கும் ஆயிரம் கருத்து வேற்றுமைகள் உண்டு. ஆனால் பிரதமர் மோடி தளபதியை பார்க்கும் போதெல்லாம் சொல்வார்.. கட்சி அரசியல் இருக்கட்டும் ஸ்டாலின். உன்னை எனக்குப் பிடித்திருக்கிறது. உன்னை ஏற்றுக் கொள்கிறேன். நீ வந்தால் என் வீட்டில் தங்கு என்று சொல்வார். அந்த அளவிற்கு தளபதியின் கண்ணியம், பண்பாடு தலை தூக்கி நிற்கிறது என்று நெகிழ்ந்தார்.
துரைமுருகன் மேலும் தனது பேச்சின்போது, இந்த ஆட்சியைப் பற்றி யாராலும் குறை கூற முடியவில்லை. நமது முதலமைச்சர் இது திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி இருக்கிறார் . இந்த ஆட்சியின் தத்துவத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இன்னும் 60 ஆண்டு காலத்திற்கு இந்த இயக்கத்திற்கு பயமில்லை; ஆட்சிக்கும் பயமில்லை என்கிற அளவுக்கு நம்மை வழிநடத்த தளபதி இருக்கின்றார் என்று கட்சியினரைப் பார்த்து அழுத்தமாகச் சொன்னார்.