வந்தா ராஜாவாத்தான் வருவேன் - அடம்பிடிக்கும் எடப்பாடி

பழையபடியே ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளராக அதிமுகவில் இணைந்து செயல்படலாம் என்று ஓபிஎஸ் அழைப்பு விடுத்திருக்கும் நிலையில், தான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற கனவில் இருந்த எடப்பாடியால் மீண்டும் இணை ஒருங்கினைப்பாளராக மனம் ஒத்துக்கொள்ளவில்லை என்பதால், அவர் ஓபிஎஸ் அழைப்பை நிராகரித்திருக்கிறார். அவர் திரும்ப திரும்ப ஒற்றைத்தலைமைக்கு ஓபிஎஸ் அப்போது ஒத்துக்கொள்ளவில்லை என்று இப்போது ஏன் அழைக்கிறார் என்று கேட்கிறார். ஒருவேளை ஒற்றைத்தலைமைக்கு அதுவும் தனது தலைமையின் கீழ் அதிமுக அமைவதாக இருந்தால் ஓகே என்கிறார் எடப்பாடி. அதாவது வந்தா ராஜாவத்தான் வருவேன் என்று அடம்பிடிக்கிறார் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்றும், இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், எல்லோரும் கசப்பை மறந்து இணைந்து செயல்படலாம் என்று ஓபிஎஸ் விடுத்த அழைப்பை நிராகரித்திருக்கிறார் எடப்பாடி.
அன்புச்சகோதரர் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து கட்சியை எப்படிவழிநடத்தினோமோ, அந்த நிலையே இப்போதும் தொடர வேண்டும் என்பதே எங்களது விருப்பம். கழகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ஒன்றுபட்டு ஜனநாயக ரீதியில் தேர்தலை சந்தித்தால் அதிமுகவை எந்த கட்சியாலும் வெல்ல முடியாது. அ அம்மாவின் பிள்ளைகளான எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அசாதாரண சூழல் ஏற்பட்டது.
அவைகளை எங்கள் மனதில் இருந்து அப்புறப்படுத்தி, மீண்டும் கழகம் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எண்ணம். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் பொறுப்பை ஏற்க வேண்டும், அதற்கு ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்புகளை அனைத்தையும் மனங்களில் இருந்து தூக்கி எரிய வேண்டும். அன்பு சகோதரர் எடப்பாடி பழனிசாமியும், நானும் இணைந்து சிறப்பாக செயலாற்றினோம். 4 ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது முழு ஒத்துழைப்பு வழங்கினோம், அந்தநிலை தொடர வேண்டும். மீண்டும் ஒன்றிணைந்து செயல்பட வரவேண்டும் என்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.
ஓபிஎஸ் அழைப்பை எடப்பாடி ஏற்றுக்கொள்வார் என்ற பேச்சு இருந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கிறார். இதன் தீர்ப்பிற்காக காத்திருக்கப்போவதாக தெரிவித்திருக்கிறார் எடப்பாடி.
அவர் மேலும் அந்த செய்தியாளரிடம் பேசியபோது, ’’கட்சியின் உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் தரம் தாழ்ந்த செயலில் ஈடுபடும்போது அவருடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்? முதல்வர் வேட்பாளராக என்னை ஏற்க மறுத்ததே தோல்விக்கு காரணம். கட்சியில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டால் மக்களிடம் அதிமுக மீது எப்படிநம்பிக்கை ஏற்படும்? இணைந்து செயல்பட ஓபிஎஸ் விடுத்த அழைப்பை கிண்டல் செய்துள்ளார். எப்படியாவது பதவியில் இருக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி அழைப்பு விடுப்பவர்தான் ஓபிஎஸ் என்றார். தானும் தனது மகனும் பதவியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் ஓபிஎஸ். அதிமுக தலைமை அலுவலகத்தை அடித்து நொறுக்கி ஆவணங்களை அள்ளிச்சென்றவர்களுடன் எப்படி இணைந்து செயல்பட முடியும்?’’ என்று கேட்கிறார்.
ஒற்றைத்தலைமை - பொதுச்செயலாளர் கனவில் மிதக்கும் எடப்பாடி, அதிலிருந்து வெளியே வந்தால் கெத்து போய்விடும் என்றே நினைப்பதாக சொல்கிறது அதிமுக வட்டாரம்.