டெல்லி பல்கலை. தமிழ் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும் - சு.வெங்கடேசன் எம்.பிக்கு லெட்டர் போட்ட மத்திய அமைச்சர்
டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழ் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படும் என்கிற மத்திய அமைச்சரின் அறிவிப்புக்கு மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் சு.வெங்கடேசன் எம்.பி எழுதிய கடிதத்தை , அவர் அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அதில், “ டெல்லி பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது குறித்து 21.12.2021 அன்று ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு ஒன்றிய கல்வி இணை அமைச்சர் முனைவர் சுபாஷ் சர்க்கார் 11.03.2022 தேதியிட்ட கடிதம் வாயிலாக பதில் அளித்துள்ளார்.
டெல்லி பல்கலைக் கழகம் நாடாளுமன்ற தனிச் சட்டம் மூலம் உருவாக்கப்பட்டது; டெல்லி பல்கலைக் கழக சட்டம் 1922 மற்றும் அதன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட/ அவசர சட்ட நியதிகளுக்கு உட்பட்டு செயல்படும் அமைப்பு; அதன் முடிவுகள் அதன் செயற்குழு/கல்விக் குழு/மன்றம் ஆகியவற்றால் மேற்கொள்ளப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
எனது கடிதம் டெல்லி பல்கலைக் கழகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அதன் இந்திய நவீன மொழிகள் மற்றும் இலக்கிய கல்வித் துறையில் தமிழ் சார் காலியிடங்கள் கீழ்க்கண்ட எண்ணிக்கையில் உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். உதவிப் பேராசிரியர் - தமிழ் - 1 ( பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர் - 54/5), இணைப் பேராசிரியர் - தமிழ் 1 ( பட்டியல் சாதி - 50) 1 (பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினர் - 814/5), 1 ( இதர பிற்பட்ட பிரிவினர் - 080) ஆகிய காலியிடங்கள் உள்ளன. மேலும் தயாள் சிங் கல்லூரியில் ஒரு காலியிடம் உள்ளது;
இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளை டெல்லி பல்கலைக் கழகம் தற்போது மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். அமைச்சருக்கு நன்றி. தலைநகரில் தமிழ்க் கல்வி தடையின்றி கிடைக்கட்டும். டெல்லி பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கு உரிய இடம் இருக்க வேண்டும், தொடர வேண்டும் என்ற எனது முயற்சிக்கு கிட்டியுள்ள நல்ல பதில். முன்னேற்றம். வெற்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.