டீக்கடைக்காரன் தீவு வாங்கியிருக்கான், இவனுங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் சசிகலா காலும் மோடியோட காலும்தான்! ஓபிஎஸ்-இபிஎஸ்சை விளாசும் திருச்சி சவுந்தரராஜன்
அதிமுகவில் இருந்து ஓ. பன்னீர்செல்வத்தை நீக்கி விட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கிறார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியை நீக்கிவிட்டேன் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவிக்கிறார். ஏட்டிக்கு போட்டியாக இப்படி இருவரும் செய்து கொண்டிருக்கையில், நீங்க யாரு? அதிமுகவுக்கும் உங்களுக்கும் என்னை சம்பந்தம்? என்று கொதித்தெழுந்திருக்கிறார் திருச்சி சவுந்தரராஜன். உண்மையிலேயே அதிமுகவின் நிறுவன உறுப்பினராக இருக்கும் திருச்சி சௌந்தரராஜன் இருவரையும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கிய போது இருந்த 12 பேர்களில் ஒருவர் திருச்சி சௌந்தரராஜன். அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்திருக்கும் பேட்டியில், எம்.ஜி.ஆர். உருவாக்கிய அண்ணா திமுக பெயரைச்சொல்லி ஒரு கபட நாடகம் நடந்துகொண்டிருக்கிறது. அவர்களின் முகத்திரையை கிழிப்பதுதான் என் வேலை என்கிறார்.
எம்.ஜி.ஆர். கொண்டு வந்த அதிமுகவை பலப்படுத்தி வழி நடத்திக்கொண்டிருக்கிறாரே எடப்பாடி பழனிச்சாமி என்ற கேள்விக்கு, ‘’அம்மா ஆட்சி அம்மா ஆட்சின்னு ஜெயலலிதா படத்தைதான் பையில வச்சிக்குவாராம். ஜெயலலிதா படத்தைதான் எல்லா பயலுகளும் பையில் வச்சிருக்கானுங்க. ’’ என்கிறார்.
மேலும், ‘’டீக்கடைக்காரன் தீவு எல்லாம் வாங்கியிருக்கான். யாரு..பன்னீர்செல்வம்தான். அவரு பையன் தனி ஒரு பிளைட் எடுத்துக்கிட்டு உலகம் சுத்தி வர்றாரு. பன்னீர்செல்வம் மட்டுமல்லா எல்லா பயலுகளும் நிறைய வாங்கியிருக்கானுங்க. இவங்க இருக்குறது அண்ணா திமுக அல்ல. அம்மா திமுகன்னு வச்சிக்கட்டும். இல்லேன்னா பழனிச்சாமி திமுக, பன்னீர்செல்வம் திமுகன்னு வச்சிக்கட்டும். ஆனா, அண்ணா திமுக என்று சொல்லுற தகுதி இவனுங்களுக்கு இல்ல. அண்ணாவின் கொள்கை இவனுங்களுக்கு தெரியது. அரசியலுக்கு எப்படி தியாக உணர்வோடு வரணும்ங்கிறதும் தெரியாது. இவனுங்களுக்கு தெரிஞ்சது எல்லாம் சசிகலா காலும் மோடியோட காலும்தான். ரெண்டாவது கொளையடிக்கிறது எப்படின்னு தெரியும்’’என்று கடுமையாக விளாசி எடுத்திருக்கிறார்.