“அதிமுக போட்ட பிச்சையால் 4 எம்.எல்.ஏக்களை பாஜக பெற்றது”

 
annamalai

அதிமுக போட்ட பிச்சையால் 4 எம்எல்ஏ.க்களை பாஜக பெற்றதாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் திருத்தணி  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் எம்பி. திருத்தணி கோ. ஹரி  தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணியில் நகர அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி  முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் அதிமுக கழக அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்பியுமான திருத்தணி கோ.ஹரி உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் கோ.ஹரி, “தமிழகத்தில் 4 தொகுதிகளை வென்ற பாஜக தன்னை எதிர்க்கட்சியாக நினைத்துக் கொண்டுள்ளது. ஆனால் அதிமுக போட்ட பிச்சையாலேயே அந்த 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.  நாள்தோறும் நாளிதழ்கள், மீடியாக்களில் தன் பெயர் வரவேண்டும் என்பதற்காகவே பாஜக தலைவர் அண்ணாமலை எதை எதையோ பேசி வருகிறார்” எனக் குற்றஞ்சாட்டினார்.