இது நம்ம ராசி.. உங்க ராசி.. ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொட்டுது- முதல்வர் ஸ்டாலின் கலகல

இது நம்ம ராசி உங்க ராசி.. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து மழை பெய்யுது. தண்ணீர் கஷ்டமே இல்லை . அதுவும் கொங்கு மண்டலத்திற்கு வந்தாலே மழை பெய்யுது என்று ராசியை குறித்து பேசி அரங்கத்தை கலகலப்பாக்கி இருக்கிறார் முதல்வர் மு. க .ஸ்டாலின்.
ஈரோடு மாவட்ட திமுக துணைச் செயலாளர் செந்தில்குமாரின் இல்ல திருமண விழாவில்தான் முதல்வர் இவ்வாறு பேசியுள்ளார். ஈரோடு மேட்டுக் கடையில் திருமண மண்டபத்தில் நடந்த இந்த திருமண விழாவில் பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின். இந்த விழாவில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ. சாமிநாதன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இந்த திருமண விழாவில் பங்கேற்றார்.
புதுமணத் தம்பதிகளை வாழ்த்தி பேசிய போது, திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து மழை பெய்து வருகிறது. தண்ணீர் கஷ்டமே இல்லை. இது நம்ம ராசி உங்களின் ராசி. அதுவும் கொங்கு மண்டலத்திற்கு வந்தாலே மழை பெய்கிறது. மழை பெய்தால் கூட கழகத் தொண்டர்கள் குடும்ப விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்
என்று ராசி குறித்து முதல்வர் பேசியதில் திருமண விழா அரங்கம் கலகலப்பானது.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், இது பெரியார் பிறந்த மண். இந்த மாவட்டத்தில் கலைஞருக்கு மூன்று சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. மூன்று சிலைகள் அல்ல 300 சிலைகள் வைக்கலாம் என்றவர், சீர்திருத்த திருமணங்கள் இங்கு நடத்தி வைக்க காரணமே 1962 ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா சீர்திருத்த திருமணத்தை சட்டபூர்வமாக்கி தீர்மானம் நிறைவேற்றினார். சமூக நீதியை நிலை நாட்டுவதில் இந்த ஆட்சி பெரும் பங்கு வைக்கிறது என்றார்.