“ஈபிஎஸ்-க்கு ஆதரவு தரவில்லையெனில் கட்சியை விட்டு நீக்குவோம் என மிரட்டுகின்றனர்”
எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் ஒற்றை தலைமை ஏற்றால் ஆதரவு அளிக்காத நபர்களை கட்சியில் இருந்து நீக்குவோம் என தெரிவித்ததால் மட்டுமே அவருக்கு ஆதரவு அளித்தேன் என மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு திரும்பிய பின் தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஜெயதேவி பேட்டியளித்துள்ளார்.

தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் ஜெயதேவி பேட்டி நீண்ட காலமாக ஓபிஎஸ் ஆதரவாளராக பார்க்கபட்டவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்த நிலையில், இன்று மீண்டும் சென்னை விமான நிலையத்தில் ஓபிஎஸ்-ஐ சந்தித்து மன்னிப்பு கோரினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயதேவி, “எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில், அவர் பொது செயலாளர் பதவிக்கு வந்தவுடன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கி விடுவோம் என மாவட்ட செயலாளர் மூலம் அழுத்தம் தந்தனர். அதனால் தான் அங்கு சென்றோம். அரை மணி நேரம் தான் அங்கு இருந்தோம். அதன் பின்னர் ஓபிஎஸ் டெல்லியில் இருந்து வரும் வரை மன நிம்மதி இல்லாமல் இருந்தேன்.தற்போது விமான நிலையத்தில் அவரை சந்தித்து மன்னிப்பு கேட்டேன் மீண்டும். ஓபிஎஸ் -க்கு ஆதரவு அளிக்க வந்து விட்டேன். தொடர்ச்சியாக எடப்பாடி தரப்பில் அழுத்தம் தந்து கொண்டுள்ளனர், பொதுக்குழுவில் மிகவும் மோசமாக நடந்து கொண்டனர்” எனக் கூறினார்.


