அவமானப்படுத்துகிறார்கள்... : செய்தியாளர்களிடம் தமிழிசை குமுறல்

 
tm

தெலுங்கானா அரசு தன்னையும் ஆளுநர் மாளிகையினையும் தொடர்ந்து  அவமானப்படுத்தி வருவதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.  

t

 தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராக பதவி ஏற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு தமிழிசை சௌந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர் தெலுங்கானா அரசினால் தனக்கு ஏற்பட்ட அதிருப்தி குறித்து வருத்தத்துடன் தெரிவித்தார்.

 தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு பலமுறை அழைப்பு விடுத்தும் கூட அவர் ஆளுநர் மாளிகைக்கு வர மறுக்கிறார்.   உண்மையான அன்புடன் மக்களுக்கு பணியாற்ற விரும்பினேன்.   ஆனால் அந்த முயற்சிக்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்டது.   எனது நடவடிக்கைகளில் எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை. நான் சர்ச்சைக்குரிய நபரும் இல்லை.  நான் ஆக்கபூர்வமான மனிதர் .  சிறந்த நட்புணர்வு அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் என்று சொன்ன தமிழிழை,  திருவனந்தபுரத்தில் நடந்த தென் மாநில கவுன்சில் கூட்டத்தில் சந்திரசேகரராவ் கலந்து கொள்ளாதது தவறு.  நான் புதுச்சேரி ஆளுநர் என்ற முறையில் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன்.

tt

 இந்த கூட்டத்தில் ஆந்திரா தெலுங்கானா மாநிலம் சார்ந்த 75 சதவீத பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது.   அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாராக இருந்தார்.  அனைத்து முதல்வர்களும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.  ஆனால் சந்திரசேகரராவ் கலந்து கொள்ளவில்லை.  கூட்டத்தில் கலந்து கொள்வதில் அவருக்கு என்ன பிரச்சனை? என்ற கேள்வியை எழுப்பினார் .

இக்கூட்டத்தில் அனைத்து பிரச்சனைகள் பற்றி விவாதிக்க தயாராக இருந்த நிலையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்களின் கடமையை மறந்து விடுகின்றார்கள் என்றார்.

 குடியரசு தினத்தன்று தேசிய கொடி ஏற்றவும்,  மாநில மக்களுக்கு உரையாற்றவும் வாய்ப்பு மறுக்கப்பட்டது.   கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மேற்கோள்காட்டி ஆளுநர் மாளிகையிலேயே தேசியக்கொடி ஏற்றும்படி அதிகாரிகள் தெரிவித்தார்கள்.  அனைத்து மாநிலங்களிலும் குடியரசு தின அணிவகுப்பு நடந்தது . ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது ஆச்சரியமாக இருக்கிறது.   சரி அதுபோகட்டும்,  மக்களுக்கு குடியரசு தின உரை ஏற்றுவது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்ட போதும் எந்த பதிலும் இல்லை .  இதனால் நானே உரை தயாரித்து  அதை பேசினேன்.  பேசுவதற்கு உரை தராவிட்டால் நான் ஏன் அமைதியாக இருக்க வேண்டும்?  பேச எனக்கு உரிமை இல்லையா ? அவர்கள் பேசுவதை மட்டும் தான்  நான் பேச வேண்டுமா என்ன? என்ற கேள்வியை எழுப்பினார்.

m

 தெலுங்கானா முதல்வரும் ,  அவரது கட்சியின் எம்பிக்கள்,  எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகை வருவதில் என்ன தடை இருக்கிறது ? ஆளுநர் மாளிகை என்ன தீண்டத்தகாத இடமா?  அரசியல்வாதியாக இருந்த போது சமூக வலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டேன். தற்போது ஆளுநர் பதவி வைக்கும் போதும் விமர்சிக்கப்படுகின்றேன்.   நான் ஒரு வலிமையான நபர் என்றார் அழுத்தமாக.

ஆன்மீக யாத்திரை ஒன்றில் பங்கேற்க ஹெலிகாப்டர் கேட்டபோது கடைசி நிமிடம் வரை தரவில்லை . அதனால் சாலை மார்க்கமாகவே சென்றேன்.   ஆளுநர் மாளிகை பலமுறை அவமானப்படுத்தப்பட்டிருக்கிறது.   மாவட்டங்களுக்கு செல்லும்போது ஆட்சியர்கள், எஸ்பிக்கள் வழிமுறைகளை பின்பற்றுவது இல்லை.  இதற்கான உத்தரவு எங்கிருந்து வருகிறது என்று எனக்கு தெரியாது.  அவர்கள் வராதது பற்றி கவலை இல்லை.  மாநில அரசில் உள்ள சில பிரச்சனைகளை எடுத்துச் சொன்னேன் . ஆனால் அதனை அவர்கள் எடுத்துக் கொண்டார்களா இல்லையா என்பது தெரியாது.   அங்குமிங்கும் ஆளுநர் செல்லக்கூடாது என்று சொல்லுகின்றார்கள்.  ஆனால் ஆளுநருக்கு எந்த எல்லை கிடையாது.   ஒரு பெண் ஆளுநர் எப்படி நடத்தப்பட்டார் என்பது மாநில வரலாற்றில் எழுதப்படும் என்று  வருத்தத்துடன் தெரிவித்தார்.