ஓபிஎஸ் போனதும் பீரோவை தூக்கிக்கொண்டு ஓடிய தொண்டர்
ஓபிஎஸ் இருந்த வரைக்கும் அமைதியாக இருந்த கூட்டம் அவர் போன பின்பு பீரோவையும், பிரியாணியை தூக்கிக்கொண்டு ஓடி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி அடுத்த செம்மேடு கிராமம். இக்கிராமத்தில் நடந்த பெட்ரோல் பங்க் திறப்பு விழாவிற்கு முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்றார் இந்த பெட்ரோல் பங்க் திறப்பு விழா நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
ஒரு சிலருக்கு மட்டும் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஓபிஎஸ் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டார். அதன் பின்னர் மேடையில் மக்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மரக்கன்றுகளை பொதுமக்கள் அவர்களாகவே வந்து அள்ளிச் சென்று விட்டார்கள். அதேபோல் நலத்திட்ட உதவிகளுக்காக வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளை சிரமத்திற்கு உள்ளாகி போராடி வாங்கி சென்றிருக்கிறார்கள்.
கல்யாண சீர்வரிசைக்காக பீரோ உட்பட பல பொருட்கள் வைக்கப்பட்டு இருந்திருக்கின்றன. அதை ஒருவர் அலேக்காக தூக்கிக் கொண்டு ஓடி இருக்கிறார். பீரோ வைத்து தலையில் தூக்கிக்கொண்டு ஓடி கரும்பு தோட்டத்திற்குள் மறைந்து விட்டார் அந்த தொண்டர்.
வந்திருந்தவர்களுக்கு பிரியாணி இலவசமாக வழங்கப்பட்டது. அங்கே கூட்டம் முண்டியடித்தது சிலர் சாப்பிடுவதற்கு வாங்கியது கூட இல்லாமல், தோளில் போட்டிருந்த துண்டிலும் கட்டைப்பையிலும், வாளியிலும் வாங்கிச் சென்றார்கள்.
ஓபிஎஸ் இருந்த வரைக்கும் அமைதியாக இருந்த கூட்டம் அவர் போனதும் கட்டுக்கடங்காமல் போய்விட்டது. கூட்டத்தை முறைப்படுத்தி அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, உணவு வழங்க முடியாத அளவிற்கு நிகழ்ச்சி நிரல் ஏற்பாடு சரியாக செய்யப்படாததாலும் போதுமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படாததாலும் இப்படி நடந்து விட்டது என்று தெரியவந்திருக்கிறது.
இந்த விவகாரம் செஞ்சி பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.