ப.சிதம்பரத்துக்குத்தான் அந்த சீட்! கே.எஸ்.அழகிரியே சொன்ன பதில்

 
p

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு சீட் யாருக்கு?  ப.சிதம்பரத்திற்கா? கே.எஸ்.அழகிரிக்கா?  என்று எழுந்திருக்கும் கேள்விக்கு ப.சிதம்பரத்திற்குத்தான் அந்த சீட் என்று கிட்டத்தட்ட முடிவாகி இருக்கிறது.  ப.சிதம்பரத்திற்குத்தான் வாய்ப்பு அதிகம் என்று கே.எஸ்.அழகிரியே சொல்லிவிட்டார்.

 தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட  ஆறு எம்பிக்களின் பதவிக்காலம் ஜூன் 29ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.   காலி இடத்தை நிரப்புவதற்கான தேர்தல் வரும் ஜூன் மாதம் நடைபெறுகிறது.   ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது . தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.  தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உட்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.

ks
 
 தமிழகத்தில் இருக்கும் ஆறு மாநிலங்களவை எம்பிக்கள் பதவி காலம் ஜூன் 29ஆம் தேதி முடிவடைய இருப்பதால், அடுத்த  6 எம்.பிக்கள் யார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.  ஒரு மாநிலங்களவை எம்பி பதவிக்கு 34 அல்லது 36 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது. இந்த அடிப்படையில் திமுகவுக்கு நான்கு எம்பி பதவிகள்,  அதிமுகவுக்கு இரண்டு எம்பி பதவிகள் கிடைத்திருக்கிறது.  இதில் திமுக மூன்று சீட்டை எடுத்துக்கொண்டு,  கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒரு சீட்டை ஒதுக்கியிருக்கிறது.   இதில், திமுக தனது மூன்று எம்.பிக்களை அறிவித்துவிட்டது.   திமுகவின் மூன்று வேட்பாளர்கள் இரா.கிரிராஜன், தஞ்சை கல்யாணசுந்தரம்,  கே. ஆர். என். ராஜேஷ்குமார் என்று  மூன்று வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு விட்டனர். .  

கூட்டணியான காங்கிரஸ் கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டு இருப்பதால் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் அல்லது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகிய இரண்டு பேரில் ஒருவர் போட்டியிடுவார் என்ற பேச்சு இருக்கிறது.

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட அந்த சீட் யாருக்கு? என்று கே.எஸ்.அழகிரியிடமே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.  சென்னை சத்யமூர்த்தி பவனில் அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,  ‘’இன்னும் இரண்டு நாட்களில் தலைமை முடிவெடுத்து அறிவிக்கும்’’என்றார்.   அவரிடம் தொடர்ந்து,  அந்த ஒரு சீட் ப.சிதம்பரத்திற்கு என்கிறார்களே? என்ற கேள்விக்கு,  ‘’அவருக்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு’’ என்றார்.