இத்தனை பேருக்கா நன்றி? எடப்பாடியின் நீண்ட நன்றி பட்டியல்

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் 72 நாட்களுக்கு பின்னர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிமுக தலைமை அலுவலகம் சென்றார். அவருக்கு தடபுடலான வரவேற்பு வழங்கினர் கட்சியினர்.
இது குறித்து நன்றி தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற நான் இன்று தலைமை அலுவலகத்திற்கு வந்தபோது தலைமை கழகச் செயலாளர்கள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், எம்பிக்கள் , எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள் , முன்னாள் எம்எல்ஏக்கள் , கழக செய்தி தொடர்பாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள் , ஒன்றிய ,நகர ,பேரூராட்சி மற்றும் பகுதி கழகச் செயலாளர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், நகர பேரூராட்சி வார்டு கழகச் செயலாளர்கள், மாநகராட்சி வட்டக் கழக செயலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் கட்சித் தொண்டர்களும் உற்சாகம் பொங்கிட என்னை வரவேற்று வாழ்த்து தெரிவித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அவர் மேலும், அதிமுக நிறுவன தலைவர் எம். ஜி. ஆர் மற்றும் ஜெயலலிதாவின் நல்லாசியோடும், அதிமுக நிர்வாகிகள், கட்சித் தொண்டர்களின் ஒத்துழைப்போடும் சிறந்த முறையில் கட்சியை வழிநடத்தி மீண்டும் அதிமுக ஆட்சி மலர்வதற்கு இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன் என்ற உறுதியை மனதார அளிக்கிறேன் எனக் கூறியிருக்கிறார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் சட்டமன்ற எதிர் கட்சி தலைவர் மாண்புமிகு #எடப்பாடியார் அவர்களின் அறிக்கை. pic.twitter.com/G91UeQeMJD
— EPS 24×7 (@edapadiyaar) September 8, 2022