பா.ஜ.க.வின் ஆட்சியில் விலை அதிகரித்த பொருட்களில் எங்கள் கட்சி பிரதமர் மோடியின் படங்களை வைக்கும்.. கே. கவிதா

 
கவிதா

பா.ஜ.க.வின் ஆட்சியில் விலை அதிகரித்த பொருட்களில் எங்கள் கட்சி பிரதமர் மோடியின் படங்களை வைக்கும் என்று தெலங்கானா மேலவை உறுப்பினர் கே.கவிதா தெரிவித்தார்.

தெலங்கானாவில் கம்மாரெட்டி மாவட்டத்தில் உள்ள பீர்கூர் நகரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் கடந்த அண்மையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு நடத்தினார். அப்போது அந்த ரேஷன் கடையில் பிரதமர் நரேந்திர மோடியின் படம் வைக்கப்படாததை கண்டு அந்த மாவட்ட ஆட்சியரை  நிர்மலா சீதாராமன் கண்டித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் சில கேஸ் சிலிண்டர்களில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் பிரதமர் மோடி போட்டோ விவகாரத்தில் நிர்மலா சீதாராமனுக்கு தெலங்கானா மேலவை உறுப்பினரும், அம்மாநில முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளுமான கே.கவிதா பதிலடி கொடுத்துள்ளார்.

கேஸ் சிலிண்டரில்  மோடி படத்தை ஒட்டிய டி.ஆர்.எஸ். கட்சியினர்

ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற தெலங்கானா அரசின் ஆசரா திட்ட ஓய்வூதியம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கே.கவிதா பேசுகையில் கூறியதாவது: அவர் (நிர்மலா சீதாராமன்) வந்தது நல்லது, விருந்தினர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால் ரேஷன் கடைக்கு சென்று பிரதமரின் படம் போடாதது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் சண்டை போட்டார். பிரதமரின் படங்கள் ரேஷன் கடைகளுக்கு வெளியே வைக்கப்படுவதில்லை. நேரு காலத்திலோ, மன்மோகன் சிங்கின் காலத்திலோ அல்லது வாஜ்பாய் காலத்திலோ கூட யாருடைய படங்களையும்   போட்டதில்லை.

நிர்மலா சீதாராமன்

சீதாராமன் ஜி நீங்கள் பிரதமரின் படங்களை வைக்க விரும்பினால் நாங்கள் அதை நிச்சயம் செய்வோம். பா.ஜ.க.வின் ஆட்சியில் விலை அதிகரித்த பொருட்களில் எங்கள் கட்சி பிரதமர் மோடியின் படங்களை வைக்கும். கேஸ் சிலிண்டர்கள், யூரியா பாக்கெட்டுகள், பெட்ரோல், டீசல் நிலையங்கள், எண்ணெய் மற்றும் பருப்பு பாக்கெட்டுகளில் வைப்போம். எங்கெல்லாம் செலவுகள் அதிகரிக்கிறதோ, அங்கெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியின் படங்களை வைப்போம். ஏழைகளின் உரிமைகளை பா.ஜ.க. பறிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.