மீண்டும் அரசியலுக்கு வருகிறார்! புதிய இயக்கம் தொடங்கினார்

 
t

 ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் முடிவில் இருந்து பின் வாங்கியதை அடுத்து இனி அரசியலை விட்டே விலகி விட்டேன் என்று அறிவித்தார் தமிழருவி மணியன்.  அவர் தற்போது அந்த முடிவு எடுத்தது இமாலயத் தவறு என்று உணர்வதாக சொல்கிறார்.   காந்திய மக்கள் இயக்கத்தை காமராஜர் மக்கள் இயக்கம் என்று பெயர் மாற்றி மீண்டும்  அரசியல் செய்ய வருகிறார்.

ra

 நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்தன.   அந்த கட்சியில் முக்கிய பொறுப்பாளராக இருந்தார் காந்திய மக்கள் இயக்கம்  தமிழருவி மணியன்.   கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிவித்த பின்னர்  கட்சியின் சின்னம், கொடி, மாநாடு என்று வேலைகள் தீவிரமாக போய்க்கொண்டிருந்தது. ஆனால் திடீரென்று தான் கட்சி தொடங்கவில்லை.  இனி எந்த காலத்திலும் அரசியல் கட்சியை தொடங்கப் போவதில்லை. அரசியல் என்பதே என் வாழ்நாளில் இனி கிடையாது என்று அறிவித்துவிட்டார் ரஜினி.

 இதனால் ஏற்பட்ட அதிருப்தியில் அரசியல் வாழ்வில் இருந்து விலகுகிறேன் என்று அதிரடியாக அறிவித்தார் தமிழருவி மணியன்.  இந்த நிலையில் அவர் மீண்டும் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்.   

tt

 பண அரசியலும், வெறுப்பு அரசியலும் முற்றுகையிட்டிருக்கும் தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த ஆரோக்கியமான நல்ல அரசியலை வளர்த்தெடுப்பது நம் கடமை. நேர்மையும், நாணயமும், நல்லொழுக்கமும் நிறைந்த ஊழலின் நிழல் கூட படியாத எல்லா வகையிலும் வெளிப்படை தன்மை கொண்ட வளர்ச்சிப்பாதையில் மாநிலத்தை முன்னெடுத்துச் சென்ற பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியினை மீண்டும் நிலை நிறுத்த அர்ப்பணிப்புடன் கூடிய மக்களை ஒன்று திரட்ட மிகக் கடுமையாக ஒரு தூய்மையான அரசியலில் நாம் அனைவரும் ஈடுபட வேண்டும்.  இது காலத்தின் தவிர்க்க முடியாத கட்டாயம்  என்கிறார்.

53 ஆண்டுகள் நேர்மை பிறழாமல்,  ஒழுக்கம் தவறாமல் அரசியலை பயன்படுத்தி ஒரு ரூபாயும் அறத்திற்கு புறம்பாக சேர்க்காமல் காமராஜர் வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன் நான்.    எனது நெடிய அரசியல் பயணத்தில் இன்று வரைக்கும் ஒரு ஊராட்சித் தலைவர் தேர்தலில் கூட நின்றதில்லை.   என் இனம் மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியை தரிசிக்க வேண்டும் என்பதற்கு மேல் எனக்கு எந்த கனவும் இல்லை.  

ka

 நான் எடுத்த ஒவ்வொரு முயற்சிகள் வீணாகிப் போனதால் ஏற்பட்ட விரக்தியில் அரசியலை விட்டே விலகி நிற்பது என்று நான் எடுத்த முடிவு இமாலயத் தவறு என்று இப்போது உணர்கிறேன்.   போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்று முழு அர்ப்பணிப்புடன் காமராஜர் ஆட்சியை மீண்டும் மலர செய்ய என்னை நான் முற்றாக அர்ப்பணித்து விட்டேன்.   நான் உருவாக்கிய காந்திய மக்கள் இயக்கம் இன்று முதல் காமராஜர் மக்கள் இயக்கம் என்று பெயர் மாற்றம் பெறுகிறது என்று அறிவித்திருக்கிறார்.   வீட்டுக்கு ஒருவர் காமராஜர் மக்கள் இயக்கத்தில் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.