தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இடம்பிடிக்க பாஜக முயற்சி - டிடிவி தினகரன்
அதிமுக ஆட்சியில் இருக்கும்போது நடுநிலையாக செயல்படாததால் தற்பொழுது மடியில் கணத்தை வைத்துக்கொண்டு வழியில் பயத்துடன் இருக்கிறார்கள் என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகைதந்த அமமுக பொதுச் செயலாளர் டி.டி. வி.தினகரன் தனியார் உணவகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவின் மடியில் கணம் இருப்பதால் வழியில் பயத்துடன் இருப்பது போல தோற்றத்தை உருவாக்கி வருவது உண்மைதான். ஆட்சியில் இருக்கும் காலத்தில் மத்தியமாக செயல்படாததால் இதுபோன்ற நிலையில் அதிமுக இருக்கிறது. இது எதிர்க்கட்சிகளுக்கு தவறான செயல்பாடு, தமிழகத்தில் திமுகவிற்கு பிரதான எதிர்க்கட்சியாக பாஜக இடம் பிடிக்க முயற்சி செய்கிறார்கள். உக்ரைன் போரினால் மருத்துவ படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தமிழகத்திற்கு திரும்பிய மருத்துவ மாணவர்களை தமிழகத்திலுள்ள மருத்துவ கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்க தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
வரும் காலங்களில் நடைபெறும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக அமமுக இணையுமா? என தன்னால் யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. அரசியலில் என்ன நடக்கும் என்று கூறுவதற்கு நான் ஒன்றும் ஞானியோ ஜோதிடரோ கிடையாது. தேர்தல் வெற்றி தோல்வி என்பது அமமுகவை பாதிக்காது” எனக் கூறினார். தொடர்ந்து கடந்த காலங்களில் சசிகலாவிடம் இருந்த ஆரவாரம் தற்போழுது இல்லையே என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, அதுகுறித்து எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை என்று மழுப்பலாக பதிலளித்தார்.