அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் திடீர் ஆலோசனை
பொள்ளாச்சி அருகே அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை மேற்கொண்டார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என அனைத்திலும் அமமுக தோல்வியை தழுவிய நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட கட்சியை பலப்படுத்தும் வகையில், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூரில் இன்று அக்கட்சியின் ஒருங்கிணைந்த கோவை மண்டல ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில், நடைபெற்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், அக்கட்சியின் கொங்கு மண்டல பொறுப்பாளர் சண்முகவேல் தலைமை தாங்கினார். கோவை தெற்கு மாவட்ட செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி பேசினார். கூட்டத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.