திமுகவில் இருந்து சுப்புலட்சுமி விலகியதற்கு இதுதான் காரணம் - டி.கே.எஸ். இளங்கோவன்
![tks](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/e207ac43b1da99ab23f80d5923e242e0.jpg)
திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உடல்நலன் காரணமாக அரசியலில் இருந்து விலகுவதாக கூறியுள்ளார் என திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ் இளங்கோவன், “தூத்துக்குடி சம்பவம் குறித்து தொலைக்காட்சியில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று கூறினார். அப்படி சிறப்பாக சட்டம் ஒழுங்கை பாதுகாத்தவர் எடப்பாடி பழனிசாமி. அவர்கள் எங்களை சட்டம் ஒழுங்கு சரியில்லை எனக் கூறிவருவது கண்டனத்துக்குரியது. எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை சந்திக்க வேண்டும் என்று நீண்ட நாட்கள் காத்திருந்து இப்போது தான் சந்தித்து உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இல்லை. நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது குட்கா பாக்கெட்டுகளை எடுத்து காட்டினோம்.
உடல் நிலையை காரணம் காட்டி கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவிக்கும் போது அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறுவது தவறு. கடந்த மாதம் திமுக மகளிர் அணி சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கூட அவர் கலந்து கொண்டுள்ளார். சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு நாங்கள் அவர்களை புறக்கணிக்கவில்லை, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொண்டு தான் இருந்தார். கலந்து கொள்ளாமல் இல்லை. துணை பொதுச்செயலாளர் 5 பேர் உள்ளோம். தேவைப்பட்டால் அதிகப்படுத்த நடவடிக்கை எடுப்போம். உடல் நலன் காரணத்தால் சுப்புலட்சுமி ஜெகதீசன் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளாரே தவிர, பாஜகவில் இணைய போகிறேன் என்று கூறவில்லை. எனவே அதனை கட்சி ஏற்றுக்கொண்டு உள்ளது” எனக் கூறினார்.