சீமான் - திமுக எம்.பி. சண்டையில் குறுக்கே வந்து சிக்கிய காங்கிரஸ் எம்.பி.
திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் அண்மையில் திரைக்கு வந்தது . இது குறித்து திமுக எம்பி செந்தில்குமார், ’’பெரியார் வாழ்ந்ததை நான் பார்க்கவில்லை. இன்று திரையில் காக்கி சட்டை அணிந்த பெரியாரை மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் வடிவத்தில் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. இந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைக்காவியம் ஆக நெஞ்சுக்கு நீதி இருக்கும். உலக அளவில் பல்வேறு விருதுகளை குவிக்கும்’’ என்று சொன்னதாக ஒரு கருத்து பரவியது. ஆனால் இந்த கருத்து ஊடகவியலாளர் செந்தில் என்பவர் சொல்லி இருக்கிறார். ஆனால் நாம் தமிழர் கட்சியினர் திமுக எம்பி செந்தில்குமார் சொன்னதாக கருத்து பரப்பி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு இருந்தது.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும், ‘’ஒருத்தர் இருக்கார்.. பாராளுமன்ற உறுப்பினர் என்று நினைக்கிறேன்... செந்திலா?, ‘’ என்று தன் ஆதரவாளர்களிடம் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னர், ’’பெரியாரை நான் பார்த்ததில்லை. காக்கி சட்டையில் உதயநிதியை பார்த்ததும் அப்படியே மெய் மறந்து போயிட்டேன். பெரியாரை பார்த்த மாதிரியே இருக்கு. ஐயையோ பெரியாருக்கு வந்த சோதனை...’’ என்று சிரித்துக்கொண்டே கலாய்த்தார்.
இதற்கு திமுக எம்பி செந்தில்குமார் , ‘’பொய்யர் சீமான் பொய் மட்டும் தான் பேசுவார் என்பதற்கு இது சான்று. நெஞ்சுக்கு நீதி திரைப்படம் சமூக நீதி பேசும் படம் என்று தமிழர்கள் கொண்டாடும் திரைப்படம். ஆனால் நான் பதிவிடாத, சொல்லாததை கூச்சமே இல்லாமல் சொல்கிறார். அது சரி குறைந்த பட்சம் மனசாட்சியுடன் பேச இவர் என்ன மானமுள்ள மானிடனா?’’ என்று கடுமையாக பதிவிட்டிருந்தார்.
இதற்கு ஆவேசமான நாம் தமிழர் கட்சியினர் செந்தில்குமா எம்.பிக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நாம் தமிழர் நிர்வாகி இடும்பாவனம் கார்த்தி, ‘’சும்மா பொய்யர், பொய்யர்னு டிவிட்டர்ல உக்காந்து கூவாதீங்க.. நீங்க சொன்னபடி விவாதத்துக்கு வாங்க.. அங்க உங்க தரப்பு வாதங்களை வைங்க.. நாங்க எங்க தரப்பு வாதங்களை வைக்கிறோம். எது பொய் என்பதை, மக்கள் முடிவு செய்யட்டும். அந்த விவாத மோதலுக்கு வரத் துணிவிருக்கிறதா?”’ என்று கேட்டிருந்தார்.
’’நாம் தமிழர் கட்சியினரோடு விவாதத்துக்குத் தயார்னு சவடால் விட்டுட்டு, நாங்க ஒத்துக்கிட்டதும், மொக்கக் காரணத்த சொல்லி, வராம ஓடிப்போன நீங்க கூச்சத்தைப் பற்றிப் பேசலாமா?’’என்றும் அவர் கேட்டிருந்தார்.
இந்த விவகாரத்தில் திடீரென்று நுழைந்த விருதுநகர் காங்கிரஸ் எம்.பி.,மாணிக்கம் தாகூர், ‛‛மானமா? அப்படினா?இப்படிக்கு சீமான் அண்ணன்’’என்று பதிவிட, ’’சூடு சொரணையா? அப்படினா?- காங்கிரஸ்’’என்று இடும்பாவனம் கார்த்திக் பதிலடி கொடுத்திருக்கிறார்.