எ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி அமைப்பதை கற்பனை செய்து பார்க்க முடியாது... சிவ சேனா எம்.பி.

 
ஏ.ஐ.எம்.ஐ.எம்.

எ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி அமைப்பதை  கற்பனை செய்து பார்க்க முடியாது என்று சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் தெரிவித்தார்.

ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் மகாராஷ்டிரா பிரிவு தலைவரும், மக்களவை உறுப்பினருமான இம்தியாஸ் ஜலீலின் தாயார் அண்மையில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த வெள்ளிக்கிழமையன்று மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ராஜேஷ் தோப்பே, இம்தியாஸ் ஜலீலின் வீட்டுக்கு சென்று அவரது தாயாரின் மரணம் குறித்து துக்கம் விசாரித்தார். அப்போது, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸூடன் கூட்டணி வைக்க ஏ.ஐ.எம்.ஐ.எம். கூட்டணி வைக்க விரும்புவதாக ராஜேஷ் தோப்பேவிடம் இம்தியாஸ் ஜலீல் தெரிவித்துள்ளார்.

இம்தியாஸ் ஜலீல்

இது தொடர்பாக இம்தியாஸ் ஜலீல் கூறுகையில், நோய் காரணமாக என் தாய் இறந்த சில நாட்கள் கழித்து தோப்பே என்னை வீட்டில் சந்தித்தார். எங்களால் பா.ஜ.க. வெற்றி பெறுகிறது (எ.ஐ.எம்.ஐ.எம். வாக்குகளை பிரிக்கிறது) என்று முக்கிய கட்சிகள் எப்போதும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால் நாங்கள் பா.ஜ.க.வின் பி அணி அல்ல. நாங்கள் கூட்டணிக்கு (காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) தயாராக உள்ளோம். இருப்பினும் எனது கோரிக்கை பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை என்று தெரிவித்தார்.

சஞ்சய் ரவுத்

இம்தியாஸ் ஜலீல் கூட்டணி குறித்து பேசிய தொடர்பாக சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறுகையில், எ.ஐ.எம்.ஐ.எம். கட்சி எம்.பி. இம்தியாஸ் ஜலீலை நான் அடிக்கடி சந்தித்து வருகிறேன். அதற்காக அவர்களுடன் கூட்டணி அமைக்கிறோம் என்று அர்த்தமில்லை. எ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி அமைப்பதை நாம் கற்பனை செய்து பார்க்க முடியாது. மேலும், எ.ஐ.எம்.ஐ.எம். மற்றும் பா.ஜ.க. இடையே ரகசிய கூட்டணி உள்ளது. நீங்கள் உத்தர பிரதேச தேர்தலில் பார்த்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.