"சார் சார் நடிகர் விஜய்ய ஏன் சந்திச்சீங்க?" - ஒரே கேள்வி... தெறிச்சு ஓடிய ரங்கசாமி!
தமிழ்நாட்டில் பரபரப்பான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி நடிகர் விஜய்யை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் சென்னைக்கு வந்த ரங்கசாமி விஜய்யின் பனையூர் வீட்டிற்குச் சென்று சந்தித்து பேசியுள்ளார். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இந்தச் சந்திப்பு நடந்தது. உடனே இது அரசியல் சார்ந்த உரையாடல் தான் நடந்ததாக செய்திக்கு றெக்கைகள் முளைத்தன. ஆனால் இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என ரங்கசாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு அரசியலுக்கும் புதுச்சேரிக்கும் என்ன சம்பந்தம்... தேவையில்லாமல் இட்டு கட்டி வதந்திகளைப் பரப்பாதீர்கள் எனவும் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இந்தச் சந்திப்பு புதுச்சேரியில் ஆளும் கூட்டணி கட்சிகளுக்கிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக நிர்வாகி ஒருவர் தனது சமூக வலைதளத்தில், "புதுச்சேரி நலனுக்காக பிரதமரை, அமைச்சர்களை சந்திக்க நேரமில்லை. கூட்டணியால் வாக்குகளைப் பெற்று முதலமைச்சரானதற்கு காரணமான அதிமுக தலைவர்கள் ஓபிஎஸ், எடப்பாடியை சந்தித்து நன்றி கூற நேரமில்லை.
நடிகரை சந்திக்க மட்டும் நேரமிருக்கிறதா?" என ஆவேசமாக கேள்வியெழுப்பியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்ப இந்த விவகாரம் குறித்து பாஜக, என்ஆர் காங்கிரஸ் தலைவர்களிடம் கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த ரங்கசாமியிடமும் நேரடியாக செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். விஜய் உடனான சந்திப்பு பற்றிய கேள்வியை கேட்டவுடன், கோபமடைந்த ரங்கசாமி அங்கிருந்து புறப்பட்டார். பாஜக கூட்டணி பிணக்கு குறித்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை.
ஏராளமான நிகழ்ச்சிகள் இருந்ததால் அவர் கிளம்பினார் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வேலைவாய்ப்பினை உருவாக்கி காலிப் பணியிடங்களை நிரப்புவோம். தற்போது அப்பணி தொடங்கப்பட்டுள்ளது. காவல்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, கல்வித்துறை, வருவாய்துறை உள்பட அனைத்து துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம். அறிவித்ததுபோல் காலிப் பணியிடங்கள் அனைத்தும் எங்கள் அரசு நிரப்பும்" என்றார்.