ஆண்டுக்கு 2 கோடின்னு என்று சொன்னீங்க ஆனால் 7 லட்சம் பேருக்குதான் வேலை கிடைத்தது.. மோடியிடம் விளக்கம் கேட்ட கட்சி

 
பிரதமர் மோடி

ஆண்டுக்கு 2 கோடி வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்த நிலையில், 7 லட்சம் பேருக்கு மட்டும் வேலை கிடைத்தது ஏன் என்பதை பிரதமர் மோடி முதலில் விளக்க வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் வலியுறுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நேற்று அகில இந்திய மருத்துவ அறிவியல்  நிறுவனத்தை (எய்ம்ஸ்) பிரதமர் மோடி திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் மோடி பேசுகையில் கூறியதாவது: குறுக்குவழி அரசியலுக்கு எதிரான நான் உங்களை எச்சரிக்க விரும்புகிறேன். குறுக்குவழிகளை கடைப்பிடிக்கும் அரசியல் தலைவர்கள் நாட்டின் மிகப்பெரிய எதிரிகள். பொய்யான வாக்குறுதியை அளித்து ஆட்சியை பிடிக்கும் நோக்கம் கொண்டவர்கள் ஆட்சி அமைக்க முடியாது.

வேலைவாய்ப்பு

வளர்ச்சியின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சில அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு துரோகம் செய்கின்றன. குறுக்குவழி அரசியல் விதியை ஆணையிட அனுமதிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பிரதமர் மோடியின் பேச்சுக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் பதிலடி கொடுத்துள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றதாக பிரதமர் மோடி பேசி வருகிறார். ஆனால் இமாச்சல பிரதேசத்தில் பா.ஜ.க. பெற்ற தோல்வியை அவர் குறிப்பிடவில்லை. 

ராஷ்டிரிய ஜனதா தளம்

இப்போது குறுக்கு வழி அரசியல் பற்றி பேசும் அவர், ஆண்டுக்கு 2 கோடி வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்த நிலையில், 7 லட்சம் பேருக்கு மட்டும் வேலை கிடைத்தது ஏன் என்பதை முதலில் விளக்க வேண்டும். அதன்படி (மத்திய அரசு வாக்குறுதியின்படி), இதுவரை 8 கோடி பேருக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.