அஸ்பயர் சுவாமிநாதன் கேட்ட கேள்வி- இபிஎஸ் டீம் அதிர்ச்சி!

 
ee

அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது.   ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவின் பொருளாளர்,  எடப்பாடி பழனிச்சாமி தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பில் மட்டுமே இருவரும் நீடிக்கின்றனர் என்று தெரிவித்தார் முன்னாள் அதிமுக அமைச்சர் சிவி சண்முகம். இதற்கு, அதிமுகவின் முன்னாள் ஐடி விங் செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன் எழுப்பி இருக்கும் கேள்வி, ஓபிஎஸ் டீமை உற்சாகப்படுத்தி இருக்கிறது.  அதே நேரம் எடப்பாடி டீமை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

c

அதிமுக பொதுக்குழு வரும் 11ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று அறிவித்தார்.  இது சட்டவிரோதம் என்று ஓ .பன்னீர்செல்வம் தரப்பினர் சொல்லி வருகின்றனர்.   ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் கையெழுத்திட்டு அவர்கள்தான் பொதுக்குழுவை அறிவிக்க வேண்டும்.   அப்படி இருக்கும்போது ஒருங்கிணைப்பாளரின் ஒப்புதல் இல்லாமல், அதுவும் அவைத்தலைவர் எப்படி அடுத்த பொதுக்குழுவை அறிவிக்க முடியும். இது சட்டவிரோதம் என்று ஓபிஎஸ் டீம் சொல்லி வருகிறார்கள்.

as

இதுகுறித்து சி.வி.சண்முகம் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,   அதிமுகவின் சட்டவிதி 19 இன்படி முறையாக பொதுக்குழுவை கூட்டி  அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் விதி மீறல் இல்லை.  அவைத் தலைவரை பொதுக்குழு உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வேண்டும்.   அதுதான் அதிமுகவின் சட்டவிதி.   அவைத் தலைவரை பொதுக்குழுவில் நேற்று அறிவித்தது தீர்மானம் கிடையாது.  பொதுக் குழுவில் தான் அவைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிவிட்டது.  எடப்பாடி பழனிச்சாமி தலைமை நிலைய செயலாளர்  மட்டுமே.  பன்னீர்செல்வம் பொருளாளர் மட்டுமே.   இருவரும் இல்லாத பட்சத்தில் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள்  கட்சியை வழி நடத்தலாம் என்று கட்சியின் சட்ட விதி சொல்கிறது.   நேற்று நடந்த பொதுக்குழு முறையற்றது என்று வைத்தியலிங்கம் சொன்ன கருத்து ஏற்புடையது அல்ல பொதுக்குழுவை கூட்ட எந்த ஆட்சேபணையும் இல்லை  என்றார்.



இதற்கு அஸ்பயர் சுவாமிநாதன்,  ‘’ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகி விட்டது என்றால், அவர்களால் நியமிக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் எப்படி செல்லும் ?அவர்களால் அறிவிக்கப்பட்ட தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட, நகர ஒன்றிய, கழக நிர்வாகிகள் எப்படி செல்லும்?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.

இந்த கேள்வி எடப்பாடி டீமை அதிரவைத்திருக்கிறது.