எதுவும் மாறல; அதே பழசுதான் - காங்., மாநாடு பற்றி பிரசாந்த் கிஷோர் கடும் தாக்கு
மூன்று நாள் சிந்தனை அமர்வு மாநாடு வெற்றி என்று காங்கிரசார் சொல்லிக் கொண்டிருக்க, அக் கட்சியில் இணைவதாக இருந்த கட்சிக்காக தேர்தல் வியூகம் அமைப்பதாக இருந்த பிரசாந்த் கிஷோர், மூன்று நாள் மாநாடு தோல்வி என்று சொல்லி காங்கிரசுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்ப்பூரில் சிந்தனை அமர்வு மாநாடு மூன்று நாள் நடந்தது . கட்சியின் அடிப்படை பிரச்சனைகள் என்னென்ன? அடுத்த கட்ட கட்சி வளர்ச்சிக்கு என்னென்ன செய்வது? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான முடிவு, குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் தான் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என்பதுதான்.
அப்படி பார்த்தால் ஒரு குடும்பத்தில் ஒருவர் தான் போட்டியிட முடியும் என்றால் சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரில் ஒருவர்தான் போட்டியிட முடியும். ப. சிதம்பரம், மல்லிகார்ஜுன கார்கே உட்பட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் அவரது வாரிசுகளும் கட்சியில் எம்பி , எம்எல்ஏக்கள் ஆக இருக்கிறார்கள் . இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் துணிவு காங்கிரசுக்கு வந்து விட்டது என்று பலரும் நினைக்கையில், அது இல்லை என்பது போல் ஆகிவிட்டது காங்கிரசின் விலக்கு அறிவிப்பு.
குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும் தான் பதவி என்று சொல்லிவிட்டு, காங்கிரசில் ஐந்தாண்டுகளுக்கு மேலாக கட்சியில் பணியாற்றும் உறுப்பினர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறி இருக்கிறது. இதன் மூலம் இந்த தீர்மானம் வெறும் கண்துடைப்பு என்று விமர்சிக்கப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைப்பேன் என்று சபதம் போட்டிருந்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், அவர் கேட்ட பதவியை காங்கிரஸ் தலைமை கொடுக்காததால் காங்கிரசிற்கு தேர்தலில் வேட்பாளராக அவர் பணிபுரியவில்லை என்றாகிவிட்டது. இதன் பின்னர் பிரசாந்த் கிஷோர் தனிக்கட்சி ஆரம்பிக்க போவதாகவும் சொல்லி வருகிறார்.
இந்த நிலையில் அவர் ராஜஸ்தானில் நடந்த காங்கிரசின் மூன்று நாள் மாநாட்டை கடுமையாக விமர்சித்து இருக்கிறார் . காங்கிரசின் மூன்றுநாள் மாநாடு அர்த்தமுள்ளவற்றை அடைவதில் தோல்வியுற்றிருக்கிறது என்று கூறியிருக்கிறார். ராஜஸ்தான் சிந்தனையாளர் மாநாடு பற்றி என்னிடம் தொடர்ந்து கருத்து கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் . என் பார்வையில் இந்த மாநாடு அர்த்தமுள்ளவற்றை அடைவதில் தோல்வியுற்றிருக்கிறது என்று தான் சொல்வேன். காங்கிரசில் கொஞ்சம் கூட எதுவும் மாறாமல் பழைய நிலையே தொடர்கிறது. வர இருக்கும் குஜராத் ,இமாச்சல் தேர்தல் தோல்வி வரையிலாவது காங்கிரஸ் தலைமைக்கு சிறிது அவகாசம் அளிக்க வேண்டும் என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.