தாங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காங்கிரஸ் நினைக்கிறது... பிரகலாத் ஜோஷி குற்றச்சாட்டு
![பிரகலாத் ஜோஷி](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/7576cccfca16225f7486892fad996d55.jpg)
தாங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காங்கிரஸ் நினைக்கிறது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றம் சாட்டினார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நேற்று அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு செல்வதற்கு முன்னதாக, நாடாளுமன்ற மக்களவையில் சில எதிர்கட்சி உறுப்பினர்கள் சோனியா காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
இதனையடுத்து, தங்களை சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காங்கிரஸ் நினைக்கிறது என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறியதாவது: தாங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று காங்கிரஸ் நினைக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லையா?
காங்கிரஸ் தலைவர் (சோனியா காந்தி) சக்திவாய்ந்த மனிதரா? அவர்கள் (காங்கிரஸ்) தங்களை சட்டத்துக்கு மேலானவர்கள் என்று நினைக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அண்மையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. தற்போது சோனியா காந்தியிடம் விசாரணை நடத்தியுள்ளது.