"மாநில உரிமை பத்தி நீங்கலாம் பேசலாமா?" - லிஸ்ட் போட்டு விமர்சித்த பிரதமர் மோடி!
பட்ஜெட் கூட்டத்தொடரின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆற்றிய உரை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ஐந்து மாநில சட்டப்பேரவைகளையொட்டி அவர் பேசியதும் குறிப்பாக தமிழ்நாட்டை சுட்டிக்காட்டி உரையாற்றியதும் பாஜகவினரே எதிர்பாராத ஒரு ட்விஸ்ட் தான். மாநில உரிமைகளுக்காக எப்போதும் தமிழ்நாடு முன்னிற்கிறது. அதைப் பார்த்து மற்ற மாநிலங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தொனியில் பேசியிருந்தார்.
அதேபோல பாஜக ஒரு அரசு தான் மோடி ராஜா அல்ல. மாநிலங்களுடன் கலந்தாலோசித்து எந்தவொரு சட்டத்தையும் திட்டத்தையும் கொண்டுவர வேண்டும் எனவும் ராகுல் காந்தி கூறினார். இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒன்றியம் என அழுத்தம் திருத்தமாக தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், 1960களுக்கு பிறகு தமிழ்நாட்டிலும் 24 ஆண்டுகளாக நாகலாந்திலும் காங்கிரஸ் கால் பதிக்கவில்லை என்றார். இவர்கள் எப்படி எங்களை தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று சொல்லலாம் என கேட்டார்.
இச்சூழலில் இன்று மாநிலங்களவையில் பேசிய அவர், "காந்தியின் விருப்பப்படி காங்கிரஸ் இல்லாமல் இருந்திருக்கலாம். அப்படி இருந்திருந்தால் ஜனநாயகம் நீடித்திருந்திருக்கும். குறிப்பாக வாரிசு அரசியல் இருந்திருக்காது. அதனால் ஏற்பட்ட எமர்ஜென்சி, ஊழல், சீக்கிய இனப்படுகொலை, காஷ்மீர் பண்டிட்கள் வெளியேற்றம் என எந்த தவறும் நேர்ந்திருக்காது. இந்திய பெண்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார்கள். அரசியலில் வெற்றி தோல்வி சகஜமானது. உங்கள் விரக்தியை மக்கள் மீது திணிக்காதீர்கள்.
கூட்டாட்சி தத்துவம் குறித்து நீங்கள் பேசலாமா? உங்கள் ஆட்சியில் எத்தனையோ முதலமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. குடியரசு தலைவர் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. பிரதமரின் மகனுக்கு விமான நிலையத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள் பிடிக்கவில்லை என்று ஆந்திர முதல்வர் நீக்கப்பட்டார். எமர்ஜென்சியில் தான் தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் ஆட்சி கலைக்கப்பட்டது.1980ஆம் ஆண்டு எம்ஜிஆர் அரசும் கலைக்கப்பட்டது. உங்கள் அநீதிகளை இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்” என அடுக்கடுக்கான புகார்களை வாசித்தார்.