"தோட்டாக்களை நம்பும் கோட்சேவின் வாரிசுகள்" - துப்பாக்கிச்சூட்டால் கொதித்த ஒவைசி!
ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி பாஜகவையும் மிகக் கடுமையாக விமர்சித்து வருபவர். ஆர்எஸ்எஸ் அமைப்பையும் அதன் கொள்கைகளையும் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதனால் இந்துத்துவ வெறியர்களால் இவர் பாதுகாப்புக்கு எப்போதுமே அச்சுறுத்தல் இருக்கும். அது கடந்த வாரம் உண்மையாகிப் போனது. உபியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு காரில் டெல்லி திரும்பிக் கொண்டிருந்தார் ஒவைசி.
அப்போது அவர் கார் மீது இரண்டு மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். காருக்கு சேதம் ஏற்பட்ட போதிலும் ஒவைசி பத்திரமாக மீட்கப்பட்டார். அதன்பிறகு வேறொரு காரில் ஏறி டெல்லி புறப்பட்டு சென்றார். இச்சம்பவத்தில் இருவரைக் கைதுசெய்துள்ளனர் உபி போலீஸார். அதில் சச்சின் சர்மா என்பவர் கொடுத்த வாக்குமூலத்தில், ஒவைசியின் சகோதரர் அக்பருதீன், செங்கோட்டை, குதுப் மினார் போன்ற இடங்கள் இந்தியாவுக்குத் தன் முன்னோர்களால் வழங்கப்பட்டவை என்றார். அதனால் ஒவைசி மீது தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறினார்.
இதனிடையே ஒவைசிக்கு துப்பாக்கி ஏந்திய ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்தது. ஆனால் இதனை அவர் நிராகரித்தார். இச்சூழலில் உபி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர், "உபியில் ரவுடிகளின் மாபியா ராஜ்ஜியம் முடிவுக்கு வந்துவிட்டது என யோகி, பிரதமர் மோடி, அமித் ஷா கூறினார்கள். ஆனால் என் மீது துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் யார்? என் வாகனம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் கோட்சேவின் வாரிசுகள். காந்தியைக் கொன்றதை போன்ற மனநிலை கொண்டவர்கள். அவர்கள் வாக்குச்சீட்டை நம்பாமல் தோட்டாக்களை நம்புகிறார்கள்” என்றார்.