மாஜி அமைச்சர் கேபி அன்பழகன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

 
kpa

 அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் மீது சொத்து குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் கேபி அன்பழகன்.   இவர் தர்மபுரி பாலக்கோடு தொகுதியில் கடந்த 2001ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.    உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில்,  அதாவது 2016ஆம் ஆண்டு காலகட்டம் முதல் 2021 ஆம் ஆண்டு வரைக்கும்  வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாகவும்,  லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்றும்  கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

an

 இதையடுத்து தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார்,  கேபி அன்பழகன் அவரது மனைவி மல்லிகா,  மகன்கள் சசிமோகன், சந்திரமோகன், மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.   கேபி அன்பழகன் தேர்தலின்போது வேட்பு மனுவில் கூறப்பட்டிருந்த சொத்துக்களின் மதிப்பை வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர் .

சோதனையில் அன்பழகன் பெயரிலும் அவரது உறவினர் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக 11 கோடி 32 லட்சத்து 95 ஆயிரத்து 85 ரூபாய் சொத்து சேர்த்திருப்பதாக தெரிய வந்தது.  இதை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் தாரர் கிருஷ்ணமூர்த்தி தாக்கல் செய்த மனுவில்,  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு  செய்தாலும் இதுவரைக்கும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.   அதனால் உடனே அன்பழகன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.   இந்த வழக்கு நீதிபதி என்.  சதீஷ்குமார் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.   விசாரணை அடுத்து அன்பழகன் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டார்.