புரோக்கர்கள் மூலமாகத்தான் முதல்வரை சந்திக்க முடிகிறது - நாராயணசாமி குற்றச்சாட்டு
முதலமைச்சரையும் அமைச்சர்களையும் எளிதில் சந்திக்க முடியாதபடி புரோக்கர்கள் நிறைந்த அரசாக இருக்கிறது புதுச்சேரி அரசு என்று குற்றம் சாட்டுகிறார் முன்னாள் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
புதுச்சேரியில் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது இவ்வாறு தெரிவித்திருக்கிறார். அவர் மேலும் அது குறித்து, புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இது குறித்து காவல்துறையோ ஆட்சியாளர்களோ கவலைப்படவே இல்லை. மேலும், புதுச்சேரி மாநிலத்தில் மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. இதை தடுத்து நிறுத்த ஆட்சியாளர்களுக்கு திராணி இல்லை. ஆட்சியாளர்களே இதை ஊக்குவித்து வருகிறார்கள் என்றும் குற்றம் சாட்டுகிறார்.
முதல்வரையும், அமைச்சர்களையும் சந்திக்க வேண்டும் என்றால் புரோக்கர்கள் மூலமாகத்தான் சந்திக்க முடிகிறது. புரோக்கர்கள் நிறைந்த அரசாக புதுச்சேரி அரசு இருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
தற்போது புதுச்சேரி மாநிலத்தில் பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியின் என்.ரங்கசாமி முதல்வராக இருக்கிறார். அவரது ஆட்சி குறித்து முன்னாள் முதல்வர் கூறியிருக்கும் குற்றச்சாட்டுகள் புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.