#BREAKING அதிமுகவில் என்னை ஓரங்கட்ட முடியாது - ஓபிஎஸ் அதிரடி

ஒற்றைத்தலைமை சர்ச்சை ஏன் உருவாக்கப்பட்டது என எனக்கே தெரியவில்லை என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், “பொது செயலாளர் என்ற பதவி இனி யாருக்கும் வழங்க கூடாது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. பொதுச்செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை கொண்டுவருவது ஜெயலலிதாவுக்குச் செய்கிற துரோகம். தொண்டர்களிடமிருந்து என்னை பிரிக்க முடியாது, அதிமுகவிலிருந்து என்னை ஓரங்கட்ட முடியாது. இன்றைய கால கட்டத்தில் இரட்டை தலைமை நன்றாக சென்று கொண்டுள்ளது. இந்த நேரத்தில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தேவைதானா? எதிர்க்கட்சியாக ஒற்றுமையோடு பணியாற்றி ஆளுங்கட்சியாக வேண்டும், எந்தவித அதிகார ஆசையும் எனக்கு இல்லை.தொண்டனாகவே பணியாற்றி வருகிறேன்.
நானோ எடப்பாடி பழனிசாமியோ ஒற்றைத் தலைமை என்பது குறித்து பேசியதில்லை. நான் எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்க காரணம் தொண்டர்கள் தான். எந்த காரணத்திற்காகவும் அதிமுக இரண்டாக உடையக்கூடாது, ஆகவே ஈபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயார். நானும், ஈபிஎஸும் பேசி ஒற்றைத் தலைமை பிரச்னைக்கு முடிவு காண வேண்டும். பொதுக்குழுவுக்கு முன்னதாக நாங்கள் இணைந்து ஒரு முடிவெடுத்து விட்டால் பொதுக்குழுவில் எந்த பிரச்னனையும் வராது” எனக் கூறினார்.