ஓபிஎஸ், எடப்பாடி அனுப்பிய கடிதங்களை இன்னும் படித்து பார்க்கவில்லை - சபாநாயகர் அப்பாவு

 
a

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அனுப்பிய கடிதங்களை இன்னும் படித்துப் பார்க்கவில்லை என்று சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறார் சபாநாயகர் அப்பாவு.   அவர் மேலும்,  இருவரும் அனுப்பிய கடிதங்களை இன்னும் படித்துப் பார்க்கவில்லை. கடிதத்தை படித்து பார்த்த பின்னர் இந்த பிரச்சனையில் நியாயமான முறையில் முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.

eo

தமிழக  சட்டப்பேரவை கூட்டம் 17ஆம் தேதி தொடங்க இருக்கிறது.  இதை முன்னிட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ,  எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்கிற முறையில் சபாநாயகருக்கு ஓ.  பன்னீர்செல்வம் மீண்டும் கடிதம் அனுப்பி இருக்கிறார்.  பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பை சுட்டிக்காட்டி அந்த கடிதத்தை எழுதியிருக்கிறார்.  அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்து இருக்கிறார்.

 இதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமியும் சபாநாயகருக்கு மீண்டும் கடிதம் அனுப்பி இருக்கிறார்.    ஓ.  பன்னீர்செல்வத்திற்கு பதிலாக எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி. உதயகுமார் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார் என்று சபாநாயகர் அப்பாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி இருந்தார்.  தற்போது மீண்டும் சபாநாயகர் அப்பாவுக்கு எடப்பாடி பழனிச்சாமி எழுதி இருக்கும் கடிதத்தில்,   எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்கிற அடிப்படையில் சட்டசபையில் அலுவல் ஆய்வு குழுவில் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கோரி இருக்கிறார்.

இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தபோது,  ஓபிஎஸ் -இபிஎஸ் அனுப்பி இருக்கும் கடிதத்தில் என்ன முடிவு எடுத்துள்ளீர்கள்? என்ற கேள்வியை எழுப்பியபோது,  இருவரும் அனுப்பிய கடிதங்களை இன்னும் படித்துப் பார்க்கவில்லை. கடிதத்தை படித்து பார்த்த பின்னர் இந்த பிரச்சனையில் நியாயமான முறையில் முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.