அடாவடித்தனம் செய்ததில்லை: மண்டியிட்டு பழக்கம் இல்லை -திருச்சி சிவா
ஆதாயத்திற்காக எந்த காலத்திலும் திமுக கொள்கையையும் குறிக்கோள்களையும் இழந்து விடவில்லை என்று கூறியிருக்கிறார் திருச்சி சிவா.
மதுரையில் நடந்த திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க பொது கூட்டத்தில் திருச்சி சிவா எம். பி. பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் திமுக கொடுத்த வாக்குறுதிகள் 505. நீங்கள் தந்த காலம் ஐந்தாண்டு காலம். ஓராண்டிற்குள் 300க்கும் மேற்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றி சரித்திர ஆட்சியை செய்து வருகிறார் மு. க. ஸ்டாலின்.
கடந்த அதிமுக ஆட்சியில் யார் வேண்டுமானாலும் பணியில் சேரலாம் என்று சொன்னதால் மின்சார வாரியத்தில் பல்வேறு துறைகளில் ஹரியானா, உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பணியில் சேர்ந்துவிட்டார்கல். ஆனால், யார் வேண்டுமானாலும் என்று அதிமுக சொன்னதால் தமிழர்கள் வேலை வாய்ப்பு இழந்தார்கள் . ஆனால் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் காரியமே யார் வேண்டுமானாலும் என்ற வார்த்தையை எடுத்து விட்டு தமிழக அரசு பணிகளில் தமிழ்நாட்டு மக்கள்தான் சேர வேண்டும் என்று மாற்றியதால் 6 லட்சம் வேலை வாய்ப்புகள் தற்போது உருவாகி இருக்கிறது . அத்தனையிலும் தமிழ்நாட்டு தங்கங்கள் எல்லாம் இடம் பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
மத்திய அரசிடம் பேச வேண்டியதை பேசி பெற வேண்டியதை பெற்று வருகிறது திமுக ஆரசு. அதே நேரம் எல்லை மீறி செய்தால் உரிமைக்கு குரல் கொடுப்போம். அதற்கு பேசுகிற உணர்ச்சி, தெம்பு திமுகவுக்கு இருக்கிறது. திமுகவுக்கு மண்டியிட்டு பழக்கம் இல்லை. அதே நேரம் அடாவடித்தனமும் செய்தது இல்லை என்றார்.
பாஜகவை இந்த கூட்டத்தில் கடுமையாக விமர்சித்த திருச்சி சிவா எம்.பி. , முதல்வர் ஸ்டாலினை உயர்த்தி பேசினார். ஒரு அரசாங்கம் திட்டங்களை தீட்டி அது மக்களுக்கு சென்று சேருகிறதா என்று கண்காணிப்பதில் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் தூங்காமல் இருந்து உழைத்த வின்சென்ட் சர்ச்சில், நேரு, கலைஞர் வரிசையில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறார் என்றார்.