"கேட்டதோ 8.. கொடுத்ததோ 3".. திமுகவினர் அட்ராசிட்டி - கதறும் கதர்சட்டைகள்!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு இன்னும் 17 நாட்களே உள்ளன. ஆனால் கூட்டணிக் கட்சிகளுக்கிடையேயான இடப்பங்கீடு இன்னும் முடிவுக்கு வரவில்லை. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் பிப்ரவரி 4ஆம் தேதி. மூன்றே நாட்கள் தான் இருக்கின்றன. அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை கிளியராக முடிவெடுக்கப்பட்டுவிட்டது. பாஜகவும் அதிமுகவும் தனித்து போட்டியிடுகின்றன. ஆனால் திமுக கூட்டணியில் தான் இன்னமும் இழுபறி நீடித்து வருகிறது. இதற்குக் காரணம் அடிமட்ட அளவிலான திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சியினரிடையே தாழ்ந்து போவதில்லை.
அவர்கள் சரியான ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. கூட்டணிக் கட்சிகள் கேட்கும் இடங்களுக்கு பதிலாக வேறு இடங்களை வழங்குவதாகக் கூறுவது, அவர்கள் கேட்டதில் பாதியைக் கொடுப்பது என அட்ராசிட்டி காட்டுகின்றனர். இதுதொடர்பாக கூட்டணிக் கட்சி தலைவர்கள் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினிடம் புகார் வாசிக்கிறார்கள். ஆனாலும் கீழ்மட்ட திமுக நிர்வாகிகள் இசைந்தபாடில்லை. விடாப்பிடியாக கூட்டணிக் கட்சியினரிடையே மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றனர். இது எதிர்க்கட்சியினருக்கு சாதகமாகலாம் என எச்சரித்தும் விடுவதாய் இல்லை.
அந்த வகையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. நெல்லையில் 1 மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகள் உள்ளன. மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகள் மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. காங்கிரஸுக்கு 3 வார்டுகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. இதனால் காங்கிரஸ் நிர்வாகிகள் கடும் அதிருப்தியடைந்தனர். இதன்பின் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஆலோசனை நடத்தினார். அதன்படி தனித்து போட்டியிட முடிவெடுத்துள்ளனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சங்கரபாண்டியன், "எந்த ஒரு பிரச்சினை என்றாலும் தோழமை கட்சிக்கு துணை நின்று போராடி இருக்கிறோம். திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக-காங்கிரஸ் இடையே ஒரு முறை மட்டுமே பேச்சுவார்த்தை நடைபெற்றது. நாங்கள் 8 வார்டு கேட்டோம். ஆனால் எங்கள் சம்மதம் இல்லாமல் 3 வார்டுகள் ஒதுக்கியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் தலைமையே சொன்னாலும் மூன்று இடங்களில் போட்டியிட போவதில்லை. தனித்து நின்று போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும்” என்றார். இவ்விவகாரம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.