"ஆளுநர்கள் மத்திய அரசின் ஏஜென்டுகள்" - ஒரே போடாக போட்ட நாராயணசாமி!
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் தவிர்த்து அனைத்து கட்சி உறுப்பினர்களின் சம்மத்ததுடன் ஒருமனதாக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரசு சார்பில் பல முறை வலியுறுத்தியும் அவர் குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லை.
அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச தமிழ்நாடு எம்பிக்கள் மூன்று முறை முயற்சித்தனர். ஆனால் அமித் ஷா அவர்களை தவிர்த்து வந்தார். உடனே எம்பி டிஆர் பாலு, ஆளுநர் பதவி விலக வேண்டும் என பேட்டி கொடுக்க, அதற்குப் பின் அமித் ஷா சந்தித்தார். மசோதா மீது முடிவெடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இச்சூழலில் பிப்ரவரி 3ஆம் தேதி நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பியனுப்பினார். ஏழை மாணவர்களுக்கும் சமூக நீதிக்கும் எதிராக நீட் விலக்கு மசோதா இருப்பதால் திருப்பியனுப்புவதாக விளக்கமும் அளித்தார்.
இதனால் ஆளுநர் மீதும் மத்திய பாஜக அரசு மீதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாக பேசியுள்ள புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "நீட் தேர்வுக்கு விலக்கு கோரிய மசோதாவை தமிழ்நாடு ஆளுநர் திருப்பி அனுப்பியது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் விரோதமானது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றப்பட்டு, அனுப்பப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது தவறு. ஆளுநர் ஆர்.என்.ரவி தன் கடமையை மீறியுள்ளார்.
மசோதாவை திருப்பியனுப்ப அதிகாரம் உள்ளதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கூறியுள்ளார். மாநிலங்களைப் பொறுத்தவரை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, ஆளுநர் விளக்கம் கேட்கலாமே தவிர, திருப்பியனுப்பும் அதிகாரம் இல்லை. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தப் பிறகு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மத்திய அரசின் ஒற்றர்களாகவும், ஏஜென்டுகளாகவும் செயல்படுகிறார்கள். அது இப்போது தெளிவாக தெரிகிறது” என்றார்.