என் வழி ஜெயலலிதா வழி! அவரின் தைரியம் என்னிடம் இருக்கிறது!- சசிகலா பஞ்ச்
என் வழி ஜெயலலிதா வழி. எனக்கு என்று தனி வழி கிடையாது என்று பஞ்ச் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் சசிகலா.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன், ஜெ. தீபா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
சசிகலா, ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, அதிமுகவின் உண்மை தொண்டர்கள் எல்லோரும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை நான் தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த ஒரே எண்ணத்தில் தான் ஜெயலலிதா செயல்பட்டார். அவர் வழி தான் என்னுடைய வழி. எனக்கென்று தனி வழி எதுவும் கிடையாது என்றார்.
அவர் மேலும், எப்பொழுதும் நான் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறேன். ஜெயலலிதா எப்படி செயல்பட்டார்களோ அதே போல் தான் நானும். தமிழ்நாடு மக்களுக்கு என்ன வேண்டுமோ அதை கேட்டு கேட்டு பெறக் கூடிய தைரியம் என்னிடம் இருக்கிறது என்றார்.