மோடி வர்றார்! சென்னைக்கு வெளியே வச்சுக்குங்க - கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு
பிரதமர் மோடி நாளை சென்னைக்கு வர இருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்களை நடத்த முடிவு எடுத்து இருக்கின்றனர். இதையடுத்து கூட்டணிக் கட்சிகளுக்கு முதல்வர் முக ஸ்டாலின் ஒரு அவசர உத்தரவு போட்டிருக்கிறார். பிரதமர் மோடி சென்னைக்கு வர இருப்பதால் போராட்டங்களை சென்னைக்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள். சென்னைக்குள் எதுவும் வேண்டாம் என்று உத்தரவு போட்டிருக்கிறார்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து நாளை மே 26 மற்றும் நாளை மறுநாள் மே 27 ஆகிய தேதிகளில் ஒன்றிய, நகர, வட்டார அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து முடிவெடுத்துள்ளனர்.
மே25ம் தேதி முதல் 31ம் தேதி வரைக்கும் பிரச்சார இயக்கத்தை நடத்துவது என்று முடிவெடுத்துள்ளனர். மேலும், மே26 மற்றும் 27 தேதிகளில் ஒன்றிய, நகர, வட்ட அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவெடுத்துள்ளனர். 25ம் தேதி முதல் 31ம் தேதி வரையிலும் வீடு வீடாக சென்று மத்திய அரசுக்கு எதிரான கண்டன துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க வேண்டும் என்றும் முடிவெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி நாளை சென்னைக்கு வருகிறார். தேசிய நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே திட்டங்கள் தொடர்பான விழாவில் அவர் பங்கேற்கிறார். பிரதமர் மோடி பங்கேற்கும் அந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். இந்த நிலையில் சென்னையில் பிரதமருக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடந்தால் அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால் கூட்டணி கட்சியினருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி மூலமாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அந்த உத்தரவை போட்டிருக்கிறார்.
ஆர்ப்பாட்டங்களை சென்னைக்கு வெளியே வைத்துக்கொள்ளுங்கள். சென்னையை பொறுத்த வரைக்கும் எந்த ஆர்ப்பாட்டங்களையும் நடத்த வேண்டாம் என்று உத்தரவு போட்டிருக்கிறார்.