விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தரணும் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்குஉத்தரவு
![அ](https://www.toptamilnews.com/static/c1e/client/88252/uploaded/a56e34570e657a560754f19bffc2eab1.webp)
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணை தொடர சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.
கடந்த 2002 ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆண்டு வரைக்கும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறையின் அமைச்சராக இருந்தார் அனிதா ராதாகிருஷ்ணன். அந்த காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2006 ஆம் ஆண்டில் வழக்குப்பதிவு செய்தது. அது தொடர்பாக விசாரணையும் நடத்தியது.
சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கப் பிரிவு அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தியது. அனிதா ராதாகிருஷ்ணன் , அவரது குடும்ப உறுப்பினருக்கு சொந்தமான ஆறு கோடியே ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.
இதை அடுத்து சொத்துக்களை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்க பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரியும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலாக்க துறையின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான அமலாக்கத் துறையின் விசாரணைக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி அமலாக்கத்துறை விசாரணையை தொடர சென்னை உயர்நீதிமன்ற அனுமதி அளித்திருக்கிறது .
மேலும், அமலாக்கத்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிடப்பட்டிருக்கிறது.