இலவச டிக்கெட், வரி விலக்கு அளித்து தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பிரதமரும், பா.ஜ.க.வும் விளம்பரம் செய்கின்றனர்.. மெகபூபா
பிரதமரும், பா.ஜ.க.வும் இலவச டிக்கெட் கொடுத்து, வரி விலக்கு அளித்து அந்த படத்தை விளம்பரம் செய்கின்றனர், மக்களை தூண்டிவிடுகிறார்கள் என மெகபூபா முப்தி குற்றம் சாட்டினார்.
நான் தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை பாாக்கவில்லை. படத்தில் வன்முறை மற்றும் இரத்தக்களரி அதிகம் இருப்பதாகவும், அதில் வலிமிகுந்த காட்சிகள் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு நடந்தது பயங்கரமானது. அவர்களின் வலியை நாங்கள் உணர்கிறோம். ஆனால் நீங்கள் பண்டிட் வெளியேற்றத்திற்காக அனைத்து காஷ்மீர் முஸ்லிம்களையும் வெறுக்க முடியாது. ஜம்மு காஷ்மீரில் ஒவ்வொரு சமூகமும் மிக மோசமான ஒடுக்குமுறையை எதிர்கொண்டது.
பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் துப்பாக்கிகள் இடையே ஜம்மு காஷ்மீர் மக்கள் சிக்கியுள்ளனர். காஷ்மீர் பண்டிட்களும் இதில் பாதிக்கப்பட்டனர். பிரதமரும், பா.ஜ.க.வும் இலவச டிக்கெட் கொடுத்து, வரி விலக்கு அளித்து அந்த படத்தை விளம்பரம் செய்கின்றனர். மக்களை தூண்டிவிடுகிறார்கள். அவர்கள் (பா.ஜ.க.) மக்களை மத அடிப்படையில் பிரிக்கிறார்கள். காஷ்மீர் பண்டிட்டுகளின் கவலையை நிவர்த்தி செய்வதில் பா.ஜ.க. தோல்வியடைந்து விட்டது. கடந்த 8 ஆண்டுகளில் அவர்களுக்காக (காஷ்மீர் பண்டிட்டுகள்) ஏதாவது செய்திருந்தால் அவர்களின் நிலைமை வேறுவிதமாக இருந்திருக்கும்.
அவர்களுக்காக என்ன செய்தாலும், வேலைவாய்ப்புகள் பேக்கேஜ்கள், அகதி முகாம்களிலிருந்து அவர்களை கொண்டு வந்து அடுக்குமாடி குடியிருப்புகளில் மறுவாழ்வு செய்தல், ஷேக்போரா, மட்டன் அல்லது துல்முல்லாவில் போக்குவரத்து வசதிகள் இவை அனைத்தும் அடல் பிகாரி வாஜ்பாய் ஆட்சியின்போது முப்தி முகமது சயீத் முதல்வராக இருந்தபோது செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.