ஒலி பெருக்கிகள் வைத்து அனுமன் பாடல்களை சத்தமாக ஒலிக்க விட்ட எம்.என்.எஸ். கட்சியினர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை

 
ராஜ்தாக்கரே

மும்பையில் நேற்று எம்.என்.எஸ். கட்சி அலுவலகத்தில் ஒலிபெருக்கிகளை வைத்து  ஹனுமன் பாடல்களை சத்தமாக ஒலிக்க வைத்த அந்த கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சனிக்கிழமையன்று மகாராஷ்டிரா நவ்நிர்மான்  சேனா (எம்.என்.எஸ்.) கட்சியின் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே பேசுகையில் கூறியதாவது: நான் தொழுகைக்கு எதிரானவன் அல்ல, நீங்கள் உங்கள் வீட்டிலேயே பிரார்த்தனை செய்யலாம். ஆனால் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றுவது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும். நான் இப்போது எச்சரிக்கிறேன். ஒலிபெருக்கிகளை அகற்றவும் இல்லையேல் மசூதியின் முன் ஒலி பெருக்கிகளை வைத்து ஹனுமன் பாடல்களை இசைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மசூதிகளில் ஒலி பெருக்கிகள்

மசூதிகளில் ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும் இல்லையென்றால் மசூதியின் முன் ஒலி பெருக்கிகளை வைத்து ஹனுமன் பாடல்களை இசைப்போம் என்று மகாராஷ்டிரா அரசுக்கு ராஜ்  தாக்கரே எச்சரிக்கை  விடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று காலையில் மும்பையில் காட்கோபரில் உள்ள மகாராஷ்டிரா நவ்நிர்மான்  சேனா கட்சி அலுவலகத்தில் ஒலி பெருக்கிகளை வைத்து ஹனுமான் பாடல்கள் சத்தமாக இசைக்கப்பட்டது. இதனையடுத்து அனுமதி இல்லாமல் ஒலிபெருக்கிகளை வைத்ததற்காக எம்.என்.எஸ். கட்சியின் மகேந்திர  பானுஷாலியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விடுவித்தனர்.

சஞ்சய் ரவுத்

ராஜ் தாக்கரே கருத்து குறித்து சிவ சேனா எம்.பி. சஞ்சய் ரவுத் கூறுகையில், ராஜ் தாக்கரே  (நேற்று முன்தினம்) மசூதிகளில் பொருத்தப்பட்டிருந்த ஒலி பெருக்கிகளை அகற்றுவது குறித்து பேசினார். முதலில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் ஆசான் நிறுத்தப்பட்டது, மசூதிகளிலிருந்து ஒலி பெருக்கிகள் அகற்றப்பட்டது. இது மகாராஷ்டிரா, இங்கு நாட்டின் சட்டம் பின்பற்றப்படுகிறது என்று தெரிவித்தார்.