பால் தாக்கரேவின் உண்மையான வாரிசு ராஜ்தாக்கரேதான்.. சிவ சேனா அலுவலகத்துக்கு வெளியே பேனர் வைத்த எம்.என்.எஸ். கட்சி

 
எம்.என்.எஸ். கட்சி வைத்த பேனர்

மகாராஷ்டிராவில், சிவ சேனாவின் அலுவலகத்துக்கு வெளியே, தாக்கரேவின் உண்மையான வாரிசு மகாராஷ்டிரா நவ்நிர்மான் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேதான் என்று அந்த கட்சியினர் வைத்த பேனர்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமையன்று மகாராஷ்டிரா நவ்நிர்மான்  சேனா (எம்.என்.எஸ்.) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கட்சி கூட்டத்தில் பேசுகையில், நான் தொழுகைக்கு எதிரானவன் அல்ல, நீங்கள் உங்கள் வீட்டிலேயே பிரார்த்தனை செய்யலாம். ஆனால் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றுவது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும். நான் இப்போது எச்சரிக்கிறேன். ஒலிபெருக்கிகளை அகற்றவும் இல்லையேல் மசூதியின் முன் ஒலி பெருக்கிகளை வைத்து ஹனுமன் பாடல்களை இசைப்போம் என்று மகாராஷ்டிரா அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ராஜ்தாக்கரே

அதற்கு அடுத்த நாள் காலையில் மும்பையில் காட்கோபரில் உள்ள மகாராஷ்டிரா நவ்நிர்மான்  சேனா கட்சி அலுவலகத்தில் ஒலி பெருக்கிகளை வைத்து ஹனுமான் பாடல்கள் சத்தமாக இசைக்கப்பட்டது. இதனையடுத்து அனுமதி இல்லாமல் ஒலிபெருக்கிகளை வைத்ததற்காக எம்.என்.எஸ். கட்சியின் மகேந்திர  பானுஷாலியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை விடுவித்தனர். இதனால் கடந்த சில தினங்களாக அம்மாநிலத்தில் ஒலி பெருக்கி விவகாரம் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில், தாதரில் உள்ள சிவ சேனாவின் அலுவலகத்தக்கு  வெளியே, தாக்கரேவின் உண்மையான வாரிசு மகாராஷ்டிரா நவ்நிர்மான் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேதான் என்று அந்த கட்சியினர் வைத்த பேனர்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பால் தாக்கரே

அந்த பேனரில், மாண்புமிகு பாலாசாகேப்.. பாருங்கள், உங்கள் மகன் முதல்வர் உத்தவ் தாக்கரே ஒரு இந்துவாக உள்ளார், ஹனுமான் பாடல்களை பாடுவதை தடை செய்கிறார். இந்துக்கள் பொருத்தியிருந்த ஒலி பெருக்கிகள் அகற்றப்பட்டு வருகின்றன. உங்கள்  தாக்கரே பாணி மற்றும் பாரம்பரியம் ஆகியவை மாண்புமிகு ராஜ்சாகேப் தாக்கரே அவர்களால் மட்டுமே உண்மையான  பின்பற்றப்படுகிறது. மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பேனரை பாதுகாவலர்கள் உடனடியாக அகற்றினர். எம்.என்.எஸ். கட்சியின் இந்த நடவடிக்கை, சிவ சேனாவின் இந்து சார்பு பிம்பத்தை உடைக்கும் செயலாக பார்க்கப்படுவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவித்தனர்.